எதிர்பார்த்த வெற்றியை பெறாத மாநில தலைவர்களின் பதவியை பறிக்க பாஜக திட்டம்?
நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்பார்த்த வெற்றியை பெறாத மாநிலங்களில் கட்சி அமைப்புகளை மாற்ற பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று முன்தினம் (ஜூன் 4) எண்ணப்பட்டன. இத் தேர்தலில் காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணிக்கும், அதிமுக – தேமுதிக அணிக்கும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், நாம் தமிழர் கட்சிக்கும் இடையே நேரடி போட்டி நிலவியது.
மக்களவைத் தேர்தல் 2024இன் முடிவுகள் வெளியான நிலையில், பாஜக தலைமை வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களிலும், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 234 இடங்களிலும், மற்றவை 17 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இதில் பாஜக 240 தொகுதிகளிலும், காங்கிரஸ் 99 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
எனவே, நாடாளுமன்ற மக்களவை தேர்தல் முடிவில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இருப்பினும், தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் ஆதரவோடு பாஜக ஆட்சி அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்பார்த்த வெற்றியை பெறாத மாநிலங்களில் கட்சி அமைப்புகளை மாற்ற பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், குஜராத் மாநில முதலமைச்சரை மாற்ற பாஜக தலைமை திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பீகார், உத்தரப் பிரதேசம், குஜராத், தமிழ்நாடு உள்ளிட்ட மாநில பாஜக தலைவர்களுக்கு டெல்லி தலைமை அழைப்புவிடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.