"கிரிமினல் குற்றவாளிகளை சேர்க்கும் கட்சி பாஜக" - அமைச்சர் ரகுபதி விமர்சனம்!
சென்னை கொரட்டூரில் உள்ள தனியார் மண்டபத்தில் திமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு, அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் சாமுவேல், சென்னை மேயர் பிரியா உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் போது 15 கருணை இல்லங்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டன. அமைச்சர் ரகுபதி மற்றும் சேகர்பாபு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
இதனை தொடர்ந்து அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசியவர், "அமைச்சர் சேகர்பாபு பழனியில் முருகர் பக்தர் மாநாடை சிறப்பாக நடத்தி முடித்தார். தமிழகத்தில் ராமா ராமா என்று சொல்லிப் பார்த்தார்கள் அது எடுபடவில்லை. தமிழ் கடவுள் முருகன் பெயரை சொல்லிமாற்று வேடத்தில் வரலாம் என உள்ளே வருகின்றனர்.
தமிழ்நாட்டு மக்கள் ஏமாளிகள் இல்லை, தமிழ்நாட்டில் ஆன்மீகத்துக்கு எதிரான அரசியலுக்கு இது களமல்ல என திராவிட மாடல் அரசை முதலமைச்சர் நடத்திக் கொண்டிருக்கின்றார். அதற்கு போட்டியாக யார் நடத்தினாலும் அவருக்கு இணையாகது. தமிழ்நாட்டு மக்களை முருகன் பெயரை சொல்லி ஏமாற்ற முடியாது.
சமீபத்தில் பாஜக நிர்வாகிகள் கைதானது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், நாங்கள் ஆரம்பத்தில் வைத்த குற்றச்சாட்டு இந்தியாவில் கிரிமினல்களை அதிகமாக சேர்க்கும் கட்சி பாஜக, அதில் இருப்பவர்கள் அதிகமானோர் குற்றவாளிகள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் எந்தெந்த மாநிலத்தில் இருக்கிறார்கள் என்பதை ஆதாரத்துடன் தெரிவித்து இருந்தோம். கிரிமினல் குற்றவாளிக்கு அடைக்கலம் தருகின்ற கட்சி பாஜக கட்சியில் கிரிமினல்கள் இருக்கிறார்கள் என தெரிந்தால் உடனே அவர்களை வெளியேற்றும் கட்சி திமுக என தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் அதிக குற்றங்கள் நடைபெறுகிறது என எடப்பாடி பழனிச்சாமி விமர்சனத்திற்கு பதில் அளித்த அமைச்சர், பூனை கண்ணை மூடி கொண்டால் உலகம் இருண்டு விடும் என்று சொல்வார்கள் அதுபோல எடப்பாடி பழனிச்சாமிக்கு எதைப் பார்த்தாலும் பாதுகாப்பு இல்லை என சொல்வதே பழக்கமாக போய்விட்டது. அவர் காலையில் எழுந்த உடனே பாதுகாப்பு இல்லை என சொல்வதும் கூச்சல் இடுவதும் அவருடைய தினசரி பணியாகி விடுகிறது.
கீழடி நாகரிகத்தை உலகத்திற்கு கொண்டு சேர்த்தவர் தமிழ்நாடு முதலமைச்சர். அவர் மட்டும் முயற்சி எடுக்காமல் இருந்திருந்தால் கீழடி நாகரிகம் இருப்பது என்பது தெரியாமல் போயிருக்கும். அதற்கு முழு முயற்சி எடுத்த அரசு திமுக அரசு மற்றவர்கள் எதை சொன்னாலும் தமிழ்நாட்டு மக்கள் நம்ப மாட்டார்கள் தொன்மையான நாகரிகத்தை உலகத்திற்கு எடுத்துக்காட்டுவது முதலமைச்சரை விட வேற யாரும் இல்லை.
எடப்பாடி பழனிச்சாமி விவசாயி இல்லை தோளில் கலப்பை வைத்தவர்கள் எல்லாம் விவசாயிகள் இல்லை அவர் எந்த களத்தில் இறங்கி விவசாயம் செய்தார். அவர் போலி விவசாயி என முதலமைச்சர் சொல்வதில் தவறு இல்லை என தெரிவித்துள்ளார்.