ராகுல் காந்தி பொதுக்கூட்ட மேடையில் பாஜக வேட்பாளர் புகைப்படம்! என்ன நடந்தது?
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பங்கேற்கவுள்ள பொதுக் கூட்ட மேடை பேனரில் பாஜக வேட்பாளரின் புகைப்படம் இடம்பெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தியாவில் மாபெரும் ஜனநாயக திருவிழாவாக கருதப்படும் மக்களவை தேர்தல் வரும் 19-ந் தேதி தொடங்குகிறது. மக்களவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தலைவர்கள் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த வகையில், மத்தியப் பிரதேச மாநிலம் மண்டலா தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஓம்கர் சிங்கை ஆதரித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இன்று பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசவுள்ளார். இந்த நிலையில், மூத்த தலைவர் ராகுல் காந்தி கலந்துக் கொள்ள உள்ள பொதுக் கூட்ட மேடையின் பின்புறத்தில் பேனர் வைக்கப்பட்டிருந்தது.
அந்த பேனரில் காங்கிரஸ் தலைவர்களின் புகைப்படங்களுக்கு மத்தியில், மண்டலா தொகுதி பாஜக வேட்பாளரும், மத்திய இணையமைச்சருமான ஃபக்கன் சிங் குலாஸ்தேவின் புகைப்படம் இடம் பெற்றிருந்தது. இதனையடுத்து அந்த பேனரின் புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவியது.
அந்த பேனரில் தவறுதலாக அச்சடிக்கப்பட்ட ஃபக்கன் சிங் குலாஸ்தேவின் புகைப்படத்தை மறைத்து, அதற்கு மேல் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் ராஜ்னேஷ் ஹர்வன்ஷ் சிங் புகைப்படம் ஒட்டப்பட்டது.