வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் தள்ளிவைப்பு !
நாடு முழுவதும் வங்கிகளில் காலியாக உள்ள அணைத்து பணியிடங்களையும் நிரப்ப வேண்டும், பொதுமக்களின் தாக்குதலில் இருந்து வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும், அனைத்து வங்கிக் கிளைகளிலும் ஆயுதம் ஏந்திய காவலர்களை பணியில் அமர்த்த வேண்டும், தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்,
வாரத்துக்கு 5 நாட்கள் வேலையை அமல்படுத்த வேண்டும், ஊழியர்களுக்கு அளிக்கப்படும் சலுகைகளுக்கு வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கவேண்டும், அயல்பணி மூலம் வெளியாட்களை பணி நியமனம் செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 48 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வேலைநிறுத்த போராட்டத்தை அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம், இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் உள்ளிட்ட 9 சங்கங்கள் அறிவித்தன. இது தொடர்பாக இந்திய வங்கிகள் சங்கம், ஐக்கிய கூட்டமைப்பை பேச்சுவார்த்தைக்கு அழைத்தது.
இந்த நிலையில் நேற்று (மார்ச் 21) டெல்லியில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், இந்திய வங்கி சங்கத்தின் திகாரிகள் மற்றும் மத்திய நிதி துறைச் செயலாளர் பங்கேற்றனர். இதில் பல்வேறு கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்ட நிலையில் இவற்றை நேரடியாக கண்காணிப்பதாக தலைமை தொழிலாளர் ஆணையர் தெரிவித்தார்.
மேலும், வருகின்ற ஏப்ரல் 3ம் வாரத்தில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டதால், வரும் 24, 25-ம் தேதிகளில் அறிவிக்கப்பட்டிருந்த வேலைநிறுத்தப் போராட்டம் தள்ளிவைக்கப்படுவதாக அகில இந்திய வங்கி ஊழியர் சம்மேளனப் பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் தெரிவித்துள்ளார்.