பக்ரீத் பண்டிகை : ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்களிடம் நூதன முறையில் பண மோசடி!
இஸ்லாம் மதத்தின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பண்டிகை இன்று(ஜூன்.07) நாடு முழுவதுமுள்ள இஸ்லாமியர்களால் கொண்டாடப்பட்டது. இதில் ஆடுகளின் இறைச்சியை ஏழை எளிய மக்களுக்கு பங்கீடு செய்து கொடுப்பது வழக்கம்.
அந்த வகையில் கடந்த பக்ரீத் பண்டிகையின்போது மதுரை மாவட்டம் வாடிப்பட்டியை சேர்ந்த ஆயிஷா ஆட்டுப்பண்ணை என்ற தனியார் நிறுவனம், தங்களிடம் எட்டாயிரம் பணம் செலுத்தினால் ஓராண்டு கழித்து ரூபாய் 16 ஆயிரம்
மதிப்புள்ள ஆடு தங்களின் இல்லங்களுக்கே நேரடியாக வந்து வழங்கப்படும் என்ற நூதன அறிவிப்பை விளம்பரம் செய்தது
அதை நம்பி தென் மாவட்டங்களில் இருந்து ஆயிரத்திற்கு மேற்பட்ட இஸ்லாமியர்கள் இந்த ஆட்டுப் பண்ணையில் பணம் செலுத்தி
உள்ளனர். குறிப்பாக சிவகங்கையை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பணம் செலுத்தியுள்ளனர். அதனை பெற்றுக்கொண்ட பண்ணை நிர்வாகத்தினர் நேற்று மாலை ஆடுகளை டெலிவரி செய்வதாக தெரிவித்த நிலையில், பணம் செலுத்திய மக்கள் நேற்று முழுவதும் காத்திருந்தனர்.
ஆனால், பண்ணை உரிமையாளர்கள் இதுவரை ஆடுகளை டெலிவரி
செய்யாமல் இருந்ததுடன் செல்போன்களையும் சுவிட்ச் ஆப் செய்துள்ளனர். இதனால் பணம் செலுத்திய அனைவரும் ஏமாற்றத்துடம் திரும்ப சென்றனர்.
மேலும் சிவகங்கை நகர் முழுவதும் 300 க்கும் மேற்பட்ட ஆடுகள் குர்பானி
கொடுக்கப்படும் நிலையில், இதுபோல் பணம் செலுத்தி ஏமாற்றம் அடைந்ததால் வெறும் 100 ஆடுகள் மட்டுமே தற்போது குர்பானி கொடுக்கப்பட்டுள்ளது.
தென் மாவட்டம் முழுவதும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமிய மக்கள் பணம் செலுத்தியுள்ள நிலையில், ஆடுகள் குறைந்த விலையில் கொடுப்பதாக கூறி ஏராளமான இஸ்லாமிய மக்கள் ஏமாற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பல ஆண்டுகளாக பக்ரீத் பண்டிகை அன்று குர்பானி கொடுத்த இஸ்லாமியர்கள் இன்று குர்பானி கொடுக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்ததை எண்ணி மிகுந்த வருத்தம் அடைந்துள்ளனர்.