For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#AssemblyElections - ஜம்மு-காஷ்மீரில் நாளை முதல்கட்ட வாக்குப்பதிவு!

10:02 AM Sep 17, 2024 IST | Web Editor
 assemblyelections   ஜம்மு காஷ்மீரில் நாளை முதல்கட்ட வாக்குப்பதிவு
Advertisement

ஜம்மு-காஷ்மீருக்கு முதல்கட்டமாக நாளை 24 தொகுதிகளுக்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.

Advertisement

யூனியன் பிரதேசமான ஜம்மு-காஷ்மீரில் மொத்தமுள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு, 10 ஆண்டுகளுக்கு பின் 3 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. நாளை முதல் கட்டமாக 24 தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்டமாக 26 தொகுதிகளுக்கு செப்டம்பர் 25-ம் தேதியும், மூன்றாம் கட்டமாக 40 தொகுதிகளுக்கு அக்டோபர் 1-ம் தேதியும் தேர்தல் நடத்தப்படவுள்ளது. அக்டோபர் 8-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இது ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு பின் நடக்கும் முதல் தேர்தலாகும். இந்த தேர்தலில் பாஜக, காங்கிரஸ், மக்கள் ஜனநாயக கட்சி, தேசிய மாநாடு கட்சி ஆகியவை போட்டியிடுகின்றன. காங்கிரஸும், தேசிய மாநாடு கட்சியும் கூட்டணியாக போட்டியிடுகின்றன. நேற்று மாலை 5 மணியுடன், முதல் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் முடிவடைந்தது.

முதல் கட்ட தேர்தலில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை சுமார் 23 லட்சமாகும். மொத்த வேட்பாளர்கள் 219 பேர். மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மெஹபூபா முஃப்தியின் மகள் இல்திஜா முஃப்தி, பிஜ்பிகாரா தொகுதியில் போட்டியிடுகிறார். முதல்கட்ட தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் பிரசாரம் மேற்கொண்டனர்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா, துணைத் தலைவர் ஒமர் அப்துல்லா, மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மெஹபூபா முஃப்தி உள்ளிட்டோர் தங்கள் கட்சிகளுக்கு வாக்கு சேகரித்தனர்.

தேர்தல் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடைபெறுவதை உறுதிசெய்ய பலஅடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. துணை ராணுவப் படையினர், ஜம்மு-காஷ்மீர் ஆயுதப் படையினர், காவல்துறையினர் ஆகியோர் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Tags :
Advertisement