அருணாச்சலப் பிரதேசத்தில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்க வாய்ப்பு - 42 இடங்களில் பாஜக முன்னிலை!
அருணாச்சலப் பிரதேசத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், பாஜக 42 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.
இந்தியாவில் 18வது நாடாளுமன்ற ஏழு கட்டங்களாக நடைபெற்று நேற்றோடு முடிந்தது. நேற்று இரவிலிருந்தே எக்ஸிட் போல் முடிவுகளும் வெளியாகின. இதுவரை வெளியான முடிவுகளின் அடிப்படையில் மீண்டும் பாஜகவே ஆட்சி அமைக்கும் என கணிக்கப்படுகிறது. நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலோடு ஆந்திரா, சிக்கிம், ஒடிசா, அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தலும் நடைபெற்றது.
அருணாச்சலபிரதேசத்தில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. அங்குள்ள 60 சட்டசபை தொகுதிகளுக்கும், 2 மக்களவை தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் மாதம் 19-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்தது. சட்டசபை தேர்தலில் பாஜக 60 தொகுதிகளிலும் போட்டியிட்ட நிலையில், காங்கிரஸ் 19 தொகுதிகளில் மட்டுமே தனது வேட்பாளரை நிறுத்தியது. இது தவிர தேசிய மக்கள் கட்சி மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட சில முக்கிய கட்சிகளும் களத்தில் உள்ளன.
அருணாச்சல பிரதேச மாநிலத்தின் சட்டப்பேரவை ஆட்சிக்காலம் இன்றோடு முடிவுக்கு வந்த நிலையில் நடந்து முடிந்த நிலையில் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன.
இந்த சூழலில் முதலமைச்சர் பெமா காண்டு உள்பட 10 பா ஜனதா வேட்பாளர்கள் ஏற்கனவே போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதனால் எஞ்சியுள்ள 50 தொகுதிகளில் மட்டும் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. ஆட்சி அமைக்க 31 இடங்கள் தேவைப்படும் நிலையில் பாஜக போட்டியின்றி 10 இடங்களை கைப்பற்றியுள்ளது. மீதம் 21 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும்.
இந்நிலையில் தற்போது வரை பாஜக 42 தொகுதிகளிலும், காங்கிரஸ் 1 தொகுதியிலும், தேசிய மக்கள் கட்சி 7 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது. இதன்மூலம் அருணாச்சலப்பிரதேசத்தில் பாஜகவே மீண்டும் ஆட்சி அமைக்கும் சூழல் நிலவுகிறது.