சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல்; தமிழ்நாடு ஆளுநர் வழக்கில் உரிய தீர்ப்பு வழங்கியதால் கேரள அரசு மனுவை திரும்ப பெற்றது!
சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவதில் கால நிர்ணயம் செய்யக் கோரி கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவை இன்று வாபஸ் பெற்றது. தமிழ்நாடு ஆளுநர் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தங்களுக்குப் பொருந்தும் எனக் கூறி கேரள அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.
கேரள மாநிலத்தில் சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் நிலுவையில் வைத்திருந்ததைக் கண்டித்து, அவற்றை விரைந்து ஒப்புதல் வழங்க உத்தரவிடக் கோரி கேரள அரசு கடந்த 2023ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணை நிலுவையில் இருந்து வந்தது.
இதற்கிடையில், தமிழ்நாட்டில் ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த இதேபோன்ற வழக்கில், கடந்த ஏப்ரல் மாதம் உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை வழங்கியது. அதில், ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவர் அதிகபட்சமாக 3 மாத காலத்திற்குள் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில், கேரள ஆளுநருக்கு எதிராக கேரள அரசு தாக்கல் செய்த மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கேரள அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால், "ஏற்கனவே ஆளுநர்கள் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் உரிய தீர்ப்பு வழங்கப்பட்டுவிட்டதால், அந்த தீர்ப்பு தங்களுக்கும் பொருந்தும். எனவே, இந்த மனுவை திரும்பப் பெற அனுமதிக்க வேண்டும்" என்று வாதிட்டார்.
இதற்கு மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் வெங்கட ரமணி எதிர்ப்பு தெரிவித்தார். குறிப்பாக, ஆளுநர் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக குடியரசுத் தலைவர் 14 கேள்விகளை எழுப்பி விளக்கம் கோரிய விவகாரம் தற்போது 5 நீதிபதிகள் அமர்வு முன்பு விசாரணையில் உள்ளது. அதன் தீர்ப்பு வெளியாகும் வரை கேரள அரசின் மனுவை திரும்பப் பெற அனுமதிக்கக் கூடாது என்று அவர் வாதிட்டார்.
இருப்பினும், நீதிபதிகள், "ஏற்கனவே வழங்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் மனுவை திரும்பப் பெற கேரள அரசு கோருகிறது" என்று கூறி மத்திய அரசின் வாதத்தை ஏற்க மறுத்தனர். இதையடுத்து, கேரள அரசின் வழக்கை திரும்பப் பெற அனுமதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.