“தமிழ்மொழிக்கு யார் தொண்டு புரிந்தாலும் பாராட்ட வேண்டுமே தவிர தூற்றக்கூடாது” - ஆளுநருக்கு செல்வப்பெருந்தகை பதிலடி!
ஆங்கிலேயர் காலத்தில் தமிழ் மொழி சிக்கல்களையும், சவால்களையும் சந்தித்ததாக கூறிய ஆளுநர் ஆர்.என். ரவிக்கு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை பதிலடிகொடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில், “தமிழ்நாட்டின் ஆளுநர் மாண்புமிகு ஆர்.என்.ரவி அவர்கள், இன்று (14.06.2025) ஆளுநர் மாளிகையில் தமிழ் ஆளுமைகள் சிலருடன் கலந்தாலோசனையின் போது, தமிழ் மொழியின் பெருமைகள் குறித்து பேசியுள்ளார். அவருக்கு நமது பாராட்டுகள். எனினும், ஆங்கிலேயர் காலத்தில் தமிழ் மொழி சிக்கல்களையும், சவால்களையும் சந்தித்து என்று கூறியுள்ளதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ளமுடியாது. உண்மையை உணர்ந்து ஆளுநர் கருத்து சொல்வது அவரது பதவிக்கு அழகாகும்.
பிஷப் ராபர்ட் கால்ட்டுவெல் அவர்கள் தமிழ் உள்ளிட்ட திராவிட மொழிகளின் கட்டமைப்பை ஆய்வு செய்து, ' A Comparative Grammar of the Dravidian or South-Indian Family of Languages’ என்ற நூலை எழுதியவர். இவர் தமிழை ஒரு தனித்துவம் வாய்ந்த மொழியாக உலகிற்கு விளக்கியவர் பிரான்சிஸ் வொயிட் எல்லீஸ் என்பவர் சென்னை கல்லூரியின் முதன்மை அதிகாரியாக இருந்தார். தமிழின் இலக்கண அமைப்பையும், வடமொழியுடன் அதன் வேறுபாடுகளையும் தெளிவாக ஆராய்ந்தார்.
ஆங்கிலேயர்கள் முதன்முதலாக தமிழ் மொழியில் அச்சுத்தொழில்நுட்பம் (printing press) கொண்டு வந்தனர்.பார்த்தலோமஸ் ஜீகன்பால்க் போன்ற ஆங்கிலேயர் தமிழ் புத்தகங்களை அச்சிட்டு வெளியிட்டனர். சென்னை, திருச்சி போன்ற இடங்களில் ஆங்கிலேயர்கள் ஆரம்பித்த கல்வி நிறுவனங்களில் தமிழ் ஒரு பாடமாக கற்பிக்கப்பட்டது.
தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கு ஆங்கிலேயர்களின் பள்ளிகள் பெரிய பங்கு வகித்தன. பல ஆங்கில பண்டிதர்கள் தமிழில் உள்ள திருக்குறள், சிலப்பதிகாரம், தேவாரங்கள் போன்ற நூல்களை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்தனர். இது தமிழ் இலக்கியத்தை உலகத்திற்கு அறிமுகப்படுத்த உதவியது. மிரான் வின்ஸ்லோ முதன்மையான தமிழ்-ஆங்கில அகராதி (1862) வெளியிட்டார். இது தமிழ் கற்பவர்களுக்கு மிகவும் உதவிகரமானதாக இருந்தது. தமிழின் ஆழமான மரபு மற்றும் அதன் தொன்மையை ஆங்கிலேயர்கள் உலகிற்கு அறிமுகப்படுத்தியது உண்மை. யார் தமிழ்மொழிக்கு தொண்டு புரிந்தாலும், அவர்களை ஆளுநர் அவர்கள் பாராட்ட வேண்டுமே தவிர தூற்றக்கூடாது”
இவ்வாறு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.