மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு - தவ்ஹீத் ஜமாத் தலைவர் பாக்கர் அறிவிப்பு!
திராவிட அரசியலை பற்றி தெரிந்து வைத்து கொண்டு ஜிகினா காட்டி மக்களை ஏமாற்றி பொய் பேசுகிறார் அண்ணாமலை என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கட்சியின் தலைவர் பாக்கர் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழ்நாட்டில் வரும் 19 ஆம் தேதி 18வது நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு
நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கட்சியினர் சென்னை மண்ணடியில் உள்ள கட்சி தலைமையகத்தில் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
அப்போது அக்கட்சியின் மாநிலத் தலைவர் பாக்கர் செய்தியாளர்களிடையே பேசியதாவது:
நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற ஆதரவு. மாவட்ட நிர்வாகிகள் அனைவரையும் கலந்து ஆலோசித்த பிறகு 100 சதவீதம் ஒன்றுபட்ட
கருத்துடன் இந்த ஆதரவை தெரிவிக்கிறோம். அதோடு, இந்தியா கூட்டணிக்காக வீடுவீடாக தவ்ஹீத் ஜமாஅத் கட்சியினர் வாக்கு சேகரிப்பார்கள்.
மூன்றாவது முறையாக பாஜக ஆட்சியமைக்க கூடாது என்பதற்காக இந்த கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜகவினருக்கு திராவிட அரசியல் தெரியாது. அண்ணாமலையை பொறுத்தவரை திராவிட அரசியல் தெரிந்து வைத்திருக்கிறார். மக்களிடம் அவர் ஜிகினா காட்டி மக்கள் மறதிகாரர்கள் என்பதால் பொய் கூறுகிறார். குறைகள் இருந்தாலும் சிறுபான்மையினருக்கு ஆதரவு என்ற நிலையில் திமுகவும், இரண்டாம் நிலையில் அதிமுகவும் உள்ளது.
இவ்வாறு தவ்ஹீத் ஜமாத் கட்சி தலைவர் பாக்கர் கூறினார்.