INDIA கூட்டணியில் இருந்தாலும் மே.வங்கத்தில் தனித்து போட்டி - மம்தா பானர்ஜி அறிவிப்பு.!
INDIA கூட்டணியில் இருந்தாலும் மேற்கு வங்கத்தில் தனித்துத்தான் போட்டி என அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
2024 மக்களவைத் தோ்தலில் ஆளும் பாஜகவுக்கு எதிராக எதிா்க்கட்சிகள் ஒருங்கிணைந்து ‘இந்தியா’ கூட்டணியை உருவாக்கியுள்ளன. காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், சமாஜ்வாடி உள்ளிட்ட பிரதான எதிா்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் ‘இந்தியா’ கூட்டணியின் முதல் மூன்று ஆலோசனைக் கூட்டங்கள் முறையே பாட்னா, பெங்களூரு, மும்பை ஆகிய நகரங்களில் நடைபெற்றன.
இதனைத் தொடர்ந்து இந்தியா கூட்டணி கட்சிகளின் நான்காவது கூட்டம் டெல்லியில் டிசம்பர் 19-ஆம் தேதி மாலை 3 மணிக்கு நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட எதிர்கட்சிகள் கலந்து கொண்டன.
இந்தக் கூட்டத்தில் பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமாரை இந்தியா கூட்டணியின் தலைவர் பொறுப்பை ஏற்க வலியுறுத்திய நிலையில், அவர் மறுத்துவிட்டார் என்று தகவல்கள் வெளியாகின. தலைவர் பொறுப்பை ஏற்க மறுத்ததுடன் காங்கிரஸைச் சேர்ந்த ஒருவர் பொறுப்பேற்க வேண்டும் என்று நிதீஷ் குமார் வலியுறுத்தியதாக சொல்லப்படுகிறது. அதன்படி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இந்தியா கூட்டணிக் கட்சிகளின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
“ நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக காங்கிரஸ் கட்சியுடன் எந்தவித பேச்சுவார்த்தையும் இதுவரை நடத்தவில்லை I.N.D.I.A. கூட்டணியில் இருந்தாலும் மேற்கு வங்கத்தில் தனித்துத்தான் போட்டியிடுவோம். தனித்து போட்டியிட்டு பாஜகவை தோற்கடிப்போம். மேற்கு வங்கம் வழியாகத்தான் ராகுல் காந்தியின் இந்திய நீதி பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் அதுகுறித்து எங்களுக்கு எந்த தகவலும் எங்களுக்கு வரவில்லை.” என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.