பாலியல் வழக்கில் கைதான அதிமுக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்!
காஞ்சிபுரம் கீழ்படப்பை பகுதியில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட அதிமுக நிர்வாகி பொன்னம்பலம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;
“கட்சி கொள்கை-குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்; கட்சி சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கட்சியின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்துகொண்டதாலும்; கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த, M. பொன்னம்பலம், (குன்றத்தூர் மேற்கு ஒன்றிய எம்.ஜி.ஆர், மன்ற இணைச் செயலாளர்)
இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கட்சியினர் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.