அகமதாபாத் விமான விபத்து - உலக தலைவர்கள் இரங்கல்!
குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா விமானம் நேற்று மதியம் 1.38 மணியளவில் லண்டனுக்கு புறப்பட்டது. இந்த விமானத்தில் 230 பயணிகள், 10 பணியாளர்கள் மற்றும் 2 விமானிகள் என மொத்தம் 242 பேர் இருந்தனர். விமானத்தை சபீர் சபர்வால் என்ற விமானி ஓட்டினார். அவருக்கு துணையாக கிளைவ் குந்த் என்ற துணை விமானியும் இருந்தார்.
இந்த விமானம் வானில் பறந்த ஒரு சில நிமிடங்களிலே அதாவது தரையில் இருந்து 825 அடி உயரத்தை எட்டியபோது விமானியிடம் இருந்து கட்டுப்பாட்டு அறைக்கு ‘மே டே அழைப்பு’ வந்தது. ‘மே டே அழைப்பு’ என்பது சர்வதேச அளவில் அபாயத்தை தெரிவிக்கவும் உடனடி உதவி வேண்டும் என்பதைக் குறிக்கும் ரேடார் சிக்னலாகும்.
இதனை ஏற்றுக்கொண்ட கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், மீண்டும் விமானியை தொடர்பு கொள்ள முயன்றனர். ஆனால் விமானத்தில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் அவர்களால் விமானியை தொடர்பு கொள்ள இயலவில்லை. இதற்கிடையே, சில நிமிடங்களில் அந்த விமானம் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் விமானத்தில் பயணித்த 242 பேரில் 241 பேரும் உயிரிழந்தனர்.
விமான விபத்து குறித்து பல்வேறு நாட்டுத் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில்,
"விமானப் போக்குவரத்து வரலாற்றில் மிக மோசமான ஒன்று. இந்தியாவுக்கு எந்தத் நிலையிலும் உதவ அமெரிக்கா தயாராக உள்ளது. விமான விபத்து மிகவும் பயங்கரமானது. நான் ஏற்கனவே அவர்களிடம் (இந்தியா) சொல்லியிருக்கிறேன், நாம் என்ன செய்ய முடியும். இது ஒரு பெரிய நாடு, ஒரு வலிமையான
நாடு, அவர்கள் அதைக் கையாளுவார்கள், நான் உறுதியாக நம்புகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
இது குறித்து ரஷிய அதிபர் புதின் வெளியிட்டுள்ள செய்தியில், "விமான விபத்து குறித்து அதிபர் புதின் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு இரங்கல் தெரிவித்தார் என கிரெம்ளின் மாளிகை தெரிவித்துள்ளது. விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது அனுதாபத்தையும் ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறேன். விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்" என தெரிவித்தார்.
மேலும் இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், பிரான்ஸ் அதிபர் எம்மானுவல் மேக்ரான், கனடா பிரதமர் மார்க் கார்ட்னி உள்ளிட்ட பல்வேறு உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.