For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சீனாவில் கால்பதித்த அதானி குழுமம்... #Congress கண்டனம்!

11:39 AM Sep 10, 2024 IST | Web Editor
சீனாவில் கால்பதித்த அதானி குழுமம்     congress கண்டனம்
Advertisement

அதானி குழுமம் சீனாவில் கால் பதித்துள்ள நிலையில், அதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

Advertisement

கௌதம் அதானிக்கு சொந்தமான அதானி குழுமம், சீன சந்தையிலும் கால் பதித்துள்ளது. அதானி எனர்ஜி ரிசோர்சஸ் ஷாங்காய் கம்பெனி என்ற துணை நிறுவனத்தை அதானி குழுமம் சீனாவில் நிறுவியுள்ளது. இந்த நிறுவனம் சீனாவில் பொருட்கள் விநியோகத்திற்கான தீர்வுகளையும் திட்ட மேலாண்மை சேவைகளையும் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக காங்கிரஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பிரதமர் மோடி கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூனில், சீனா குறித்து தெரிவித்துள்ள கருத்து இதுவரை இந்திய பிரதமர்கள் எவரும் தெரிவிக்காத மிக அபாயகரமான கருத்தாக அமைந்துள்ளது. பிரதமர் கூறியிருப்பது வெளிப்படையான பொய். அவரது பேச்சின் வெளிப்பாடு, இந்திய எல்லைகளை ஆக்கிரமிக்கும் நடவடிக்கைகளை சீனா தொடர்ந்து மேற்கொண்டது. சீனாவிலிருந்து வரும் இறக்குமதிகள், முதலீடுகள் மற்றும் குடியேற்றங்கள் உள்ளிட்ட ஆபத்துகள் குறித்து கண்டுகொள்ளாமல் அரசு இருப்பதை பிரதமரின் கருத்து வெளிக்காட்டுகிறது.

உலககெங்கிலும் பல நாடுகள், சீனாவிலிருந்து வரும் இறக்குமதிகளுக்கு எதிராகக் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ஆனால் இந்திய எல்லைகளிலும், இந்திய எல்லைகளுக்குள்ளும் சீன வீரர்கள் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள நிலையில், இந்திய அரசு மெத்தனப்போக்குடன் செயல்படுகிறது. இந்தியாவில் சீன செயலியான டிக்டாக் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், சீனாவிலிருந்து வரும் இறக்குமதிகள் அதிகரித்துள்ளன.

அதுமட்டுமல்லாமல், சீனாவிலிருந்து வரும் பணியாளர்களுக்கு இந்திய அரசு 'ஃபாஸ்ட்-ட்ராக்' முறையில் விரைந்து விசா வழங்க நடவடிக்கைகளை எடுத்துள்ளது. சீன முதலீடுகளையும் ஆதரித்து வருகிறது. அதானி குழுமம் சீனாவில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதன் மூலம் சீனாவுக்கான ஆதரவுக் கடிதமாக இந்த செயல்பாடு மாறியுள்ளது.

சீனாவிலும், கிழக்கு ஆசியாவிலும் அதானி குழுமத்தின் முந்தைய கால செயல்பாடுகள் வலுத்த சந்தேகத்தை எழுப்புகின்றன. அதானி குழுமத்துக்கு சொந்தமான பல நிறுவனங்களில், தைவானை சேர்ந்த தொழிலதிபர் 'சாங் சங்க்-லிங்' இயக்குநராக செயல்பட்டுள்ளார். 2017-இல், அவருடைய குடும்பத்துக்கு சொந்தமான கப்பல் ஒன்று, வட கொரியாவுக்கு எண்ணெய் கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பிடிபட்டது. இந்த கப்பலுக்கு ஷங்காயில் உள்ள 'அதானி குழுமக் கப்பல் நிறுவனம்' நிதியுதவி அளித்து வந்ததும் தெரிய வந்துள்ளது.

‘ஷங்காய் அதானி கப்பல் நிறுவனம்', 'அதானி குளோபல்' மற்றும் சங்க்- லிக்குக்கு சொந்தமான பிற நிறுவனங்களுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளது. ஆனால், சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டுள்ள மேற்கண்ட எந்தவொரு நிறுவனமும், அதானி குழுமத்தின் கிளை நிறுவனங்களாக இதுவரை அங்கீகரிக்கப்படவில்லை. கடந்த சில ஆண்டுகளாக அதானியின் வெளிநாட்டு முதலீடுகள் இந்தியாவுக்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

ஜார்க்கண்ட்டில் உள்ள அதானி நிலக்கரி ஆலையிலிருந்து, வங்கதேச அரசு மின்சாரம் உற்பத்தி செய்திட ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த நடவடிக்கை, வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்ய வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தின் மையக் கருவாக அமைந்துவிட்டது குறிப்பிடத்தக்கது. வங்கதேசம் மட்டுமல்லாமல் இலங்கை, கென்யா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் அதானி குழுமம் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகிறது. இந்த நடவடிக்கைகள் இந்தியாவுக்கு தீங்கிழைக்கும் வகையில் அமைந்துள்ளன.

அதானியுடனான பிரதமர் மோடியின் நட்புறவு இப்போது உலகளவில் நன்கு அறியப்பட்டதொரு விஷயமாக உள்ளது. அதானி குழுமத்தின் வணிக லாபத்தை நோக்கி வகுக்கப்பட்டுள்ள இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகள், உலக அரங்கில் இந்தியாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளன. வெளியுறவுக் கொள்கைகள் மட்டுமல்லாமல், 'மோதானி(மோடி-அதானி கூட்டணியின்)' வெளிநாட்டு முதலீடுகள், இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளன.

பிரதமரின் சிறப்பு வாய்ந்த இந்த நட்பால் உள்நாட்டிலும், உலகளவிலும், இந்தியா ஏற்கெனவே பல தியாகங்களை செய்துவிட்டது. சீன விவகாரத்தில் அரசின் கொள்கை உருவாக்கம் போதுமானதாக இல்லை. சீனாவில் மோதானியின் முதலீடுகளால் இந்தியா செய்துள்ள தியாகங்கள் பட்டியலில் தேசப் பாதுகாப்பும், இறையாண்மையும் இணைந்துள்ளன” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement