நடிகர் ராஜேஷ் மறைவு - தலைவர்கள் இரங்கல்!
‘கன்னிப் பருவத்திலே’ படத்தின் நாயகனாக அறிமுகமானவர் ராஜேஷ். அதற்குப் பிறகு பல்வேறு படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமின்றி, மலையாளம், தெலுங்கு திரையுலகிலும் நடித்துள்ளார். வெள்ளித்திரை நடிகர் மட்டுமின்றி டப்பிங் கலைஞர், எழுத்தாளர், சின்னத்திரை நடிகர் என அனைத்திலுமே தனது முத்திரையைப் பதித்தவர் நடிகர் ராஜேஷ். 150க்கும் மேலான படங்களில் நடித்து கிட்டதட்ட 40 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் பயணித்தார். நடிகர் ராஜேசுக்கு ஏற்கனவே மூச்சுத்திணறல் பிரச்னை இருந்து வந்த நிலையில், இன்று காலை அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இதனையடுத்து உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது. இவருக்கு வயது (75). ராஜேஷின் உடல் சென்னை, ராமாபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அவரின் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
"தமிழ்த் திரையுலக மூத்த நடிகர் ராஜேஷ் மறைந்த செய்தியறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். 40 ஆண்டுகளுக்கும் மேலாக சுமார் 150 திரைப்படங்கள் மற்றும் பல சின்னத்திரைத் தொடர்களில் நடித்ததோடு, பின்னணிக் குரல் கலைஞராகவும் முத்திரை பதித்தவர் ராஜேஷ். முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி மீது அளவற்ற மரியாதையும், அன்பும் கொண்டு விளங்கினார். மு.கருணாநிதியும், ராஜேஷின் திருமணம் முதலிய அவரது இல்ல நிகழ்ச்சிகளில் தவறாது கலந்துகொண்டு வாழ்த்துவது வழக்கம்.
மு. கருணாநிதி மறைவுற்றபோது. "தமிழ்நாட்டிலுள்ள அனைத்துக் குடும்பங்களிலும் அவர் ஓர் அங்கம்" என நெகிழ்ச்சியோடு பேசி தனது இரங்கலைத் தெரிவித்தவர் ராஜேஷ் என்பதை இந்த நேரத்தில் நினைத்துப் பார்க்கிறேன். திரைத்துறையில் அவரது நீண்ட அனுபவத்தைக் கருத்தில்கொண்டு, கடந்த 2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தின் தலைவராக அவரை நியமித்தோம் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மறைவினால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரைத்துறை நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்"
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
"பிரபல திரைப்பட குணச்சித்திர நடிகர் ராஜேஷ் மாரடைப்பால் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றேன்.
நடிகர் ராஜேஷ் 'கன்னிப் பருவத்திலே', 'பயணங்கள் முடிவதில்லை", "அச்சமில்லை அச்சமில்லை', 'லெவே மலரே' உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும், சின்னத் திரை தொடர்களிலும் நடித்து மக்களின் பாராட்டையும், பேரன்பையும் பெற்றவர். அனைவரிடத்திலும் அன்பாகவும், இனிமையாகவும் பழககூடிய நடிகர் ராஜேஷை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், திரைப்படத் துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்"
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ
"கலை உலகில் சிறந்த குணச்சித்திர நடிகரும், எழுத்தாளருமான ராஜேஷ் மறைந்த செய்தி அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. பழகுவதற்கு இனிய பண்பாளரான ராஜேஷின் மறைவால் துயர்படும் குடும்பத்தாருக்கும், உற்றார் உறவினருக்கும், கலை உலக நண்பர்களுக்கும் மறுமலர்ச்சி திமுக சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்"
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்
"தமிழ், மலையாளம் உட்பட பல மொழிகளில் 150-க்கும் மேலான படங்களில் நடித்து, கிட்டதட்ட 40 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் வெற்றிகரமாக பயணித்த நடிகர் ராஜேஷ் உடல்நலக்குறைவால் மறைந்த செய்தி அறிந்து வருந்தினேன். அவரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன். அவரது இழப்பால் வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்"
கவிஞர் வைரமுத்து
