திகார் சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்தார் ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்!
ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் திகார் சிறையிலிருந்து இன்று ஜாமீனில் வெளியே வந்தார்.
டெல்லியில் ஆட்சி நடத்தும் ஆம் ஆத்மி அரசு கடந்த 2021 நவம்பரில் புதிய மதுபானக் கொள்கையை அமல்படுத்தியது. இது தனியார் நிறுவனங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளதாகவும் இதன் வாயிலாக பல கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பாக சிபிஐ, அமலாக்கத் துறை ஆகிய இரு புலனாய்வு அமைப்புகளும் தனித்தனியே வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.
இந்த வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி.யான சஞ்சய் சிங் கடந்த ஆண்டு அக்டோபரில் கைது செய்யப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது ஜாமீன் மனுவை உயர் நீதிமன்றமும் தள்ளுபடி செய்தது. இதையடுத்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அவரது மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபங்கர் தத்தா, பிரசன்னா பி.வரலே ஆகியோரை கொண்ட அமர்வு முன் நேற்று (ஏப்.02) விசாரணைக்கு வந்தது.
ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி. சஞ்சய் சிங் ஜாமீனுக்கு அமலாக்கத்துறை ஆட்சேபனை தெரிவிக்காததை அடுத்து அவருக்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில், ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் திகார் சிறையிலிருந்து இன்று ஜாமீனில் வெளியே வந்தார். அவரை வரவேற்க ஐந்து மணி நேரத்துக்கு மேலாக தொண்டர்கள் திகார் சிறையின் வெளியே காத்திருந்தனர்.
முன்னதாக, இதே வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா மற்றும் முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் ஆகிய ஆம் ஆத்மி தலைவர்கள் சிறையில் உள்ளனர். இவர்கள் தவிர, தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா இதே வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.