For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

போர்களின் கோர முகத்தை எடுத்துரைத்த புகைப்படங்கள் வரிசையில் இஸ்ரேல் - ஹமாஸ் போர் குறித்த புகைப்படம்...!

10:18 PM Mar 12, 2024 IST | Web Editor
போர்களின் கோர முகத்தை எடுத்துரைத்த புகைப்படங்கள் வரிசையில் இஸ்ரேல்   ஹமாஸ் போர் குறித்த புகைப்படம்
Advertisement

போர்களின் கோர முகத்தை எடுத்துரைத்து உலகை உலுக்கிய புகைப்படங்கள் வரிசையில் இஸ்ரேல் - ஹமாஸ் போர் குறித்த புகைப்படம் ஒன்று வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. 

Advertisement

உலகின் பல்வேறு நாடுகளில் நடக்கும் போர்கள் குறித்த செய்திகள் நமது மனதை தினம் தினம் உலுக்கிக்கொண்டுதான் இருக்கிறது. அதிலும் அந்த போர் சூழலை அப்பட்டமாக முகத்தில் அறைந்தார் போல் சொல்லும் புகைப்படங்கள் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் நிகழ்வும் அவ்வப்போது நடப்பதும் உண்டு.

குறிப்பாக 51 ஆண்டுகளுக்கு முன்பு ரஷ்யாவும், சீனாவும் ஆதரித்த வடக்கு வியட்நாமுக்கும் அமெரிக்கா ஆதரித்த தெற்கு வியட்நாமுக்கும் இடையே நடைபெற்ற நீண்ட காலப் போரில், பல லட்சம் மக்களும் பல லட்சம் ராணுவ வீரர்களும் கொல்லப்பட்டனர்.

இந்த போரின் கோர முகம் குறித்து உலக ஊடகங்கள் அனைத்தும் எவ்வளவோ எடுத்துரைத்த போதும் போரில் தொடர்புடைய வல்லரசு நாடுகள் செவி சாய்க்காமல் இருந்தது. இந்த சூழலில் வியட்நாமிய அமெரிக்கரான ‘நிக் வுட்’ என்பவர் போர் நடந்து கொண்டிருந்த பகுதியில் இருந்து ஆடையின்றி உடல் முழுவதும் காயத்துடன் ஓடிவரும் 9 வயது சிறுமியான 'பான் தி கிம் ஃபூக்' - ஐ எடுத்த புகைப்படம் ஒட்டு மொத்த உலகத்தையும் திரும்பி பார்க்க வைத்தது. அதோடு, அச்சிறுமியை மருத்துவமனையில் அனுமதித்து காப்பாற்றவும் செய்தார் புகைப்பட கலைஞர் நிக் வுட்.

இந்நிலையில், 1973ஆம் ஆண்டு நிக் வுட் இந்தப் படத்துக்காக புலிட்சர் விருதை வென்றார். ஆனால், இந்தப் படத்தைப் பயன்படுத்துவதற்கு முதலில் பல நிறுவனங்கள் மறுத்துவிட்டன. விருதுக்குப் பிறகே உலகம் முழுவதும் இந்தப் படம் பிரபலமானது. இதனை அடுத்து 1975ஆம் ஆண்டு போர் முடிவுக்கு வந்தது.

இதே போன்று, உள்நாட்டு போர் காரணமாக சிரியாவில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். இவர்கள் மத்திய தரைக்கடல் வழியாக சட்டவிரோதமான முறையில் படகுகளில் பயணம் செய்து ஐரோப்பிய நாடுகளை அடைகின்றனர். பல நேரங்களில் இந்த ஆபத்தான பயணங்கள் விபத்தில் முடிந்துவிடுகின்றன.

இப்படி, கடந்த 2015-ம் ஆண்டு சிரியா அகதிகள் சென்ற படகு ஒன்று துருக்கி கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 வயது ஆண் குழந்தையான அய்லான் குர்தி உள்பட 12 பேர் பலியாகினர்.

இதில், குழந்தை அய்லான் குர்தி துருக்கி கடற்கரையில் முகம் புதைந்த நிலையில் பிணமாக கிடந்த புகைப்படம் உலகையே உலுக்கியது. அகதிகளின் துயரங்களை விவரிக்கும் விதமாக அமைந்த இந்த புகைப்படம் சர்வதேச அளவில் பல்வேறு விவாதங்களை கிளப்பியது.

இப்படி தற்போதும் ஒரு புகைப்படம் வெளியாகி உலகெங்கும் அதிவலைகளை ஏற்படுத்தியுள்ளது. அது இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் குறித்த புகைப்படம். நீண்ட காலமாக இஸ்ரேல் - ஹமாஸ் இடையே பிரச்னை நிலவி வரும் நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி இரு தரப்பினர் இடையே போர் மூண்டது. அப்போதிலிருந்து உயிரிழப்புகள் அதிகரிக்கத் தொடங்கியது. குறிப்பாக இதில் காஸா பகுதியில் உள்ள மக்கள் கொத்து கொத்தாக பலியாகினர்.

அதிலும் குழந்தைகள் பெருவாரியாக உயிரிழந்தனர். தற்போது வரை போர் நீடித்து வரும் நிலையில், ரமலான் நோன்பு தொடங்கியுள்ளது. இதை முன்னிட்டு அல் ஜசீரா தொலைக்காட்சியில் செய்தி ஒளிபரப்பின் போது, இஸ்ரேல் - ஹமாஸ் போரின் போது உயிரிழந்த பல்லாயிரக் கணக்கான காஸா பகுதி குழந்தைகளின் பெயர்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

இந்த புகைப்படம் காண்போரை கண்கலங்க வைத்துள்ளது. இத்தனை ஆயிரம் குழந்தைகள் போரில் கொடூரமாக கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்பதை பறைசாற்றும் இந்த காட்சி இஸ்ரேல் ஹமாஸ் போருக்கான முற்றுப்புள்ளியாக இருக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags :
Advertisement