நிழலுக்காக ரோடு ரோலர் அருகே அமர்ந்த இன்ஜினியர்... நொடிப்பொழுதில் நடந்த விபத்து - மதுரையில் அதிர்ச்சி!
மதுரை மேலமடை சந்திப்பில் பால கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கு இரண்டு வருடங்களாக விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி துலுக்கன்குளம் கிராமத்தைச் சேர்ந்த கருப்புசாமி என்பவர் கட்டிட பொறியாளராக பணியாற்றி வந்ததார். இந்த நிலையில், அவர் இன்று (ஜுன் 6) காலை வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் அவர் அங்கு பணிக்காக நிறுத்தப்பட்டிருந்த ரோடு ரோலர் வண்டியின் அடியில் அமர்ந்து செல்போன் பயன்படுத்திக் கொண்டிருந்தார்.
இதையும் படியுங்கள் : 2 நாட்களாக சாலையோரம் நின்ற கார்… போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
அப்போது, அசாம் மாநிலத்தை சேர்ந்த ஓட்டுநர், சக்கரத்தின் அருகே கருப்புசாமி அமர்ந்திருந்ததை கவனிக்காமல் ரோடு ரோலர் வாகனத்தை எடுக்க முயன்றார். இதன்காரணமாக, வாகனத்தின் சக்கரத்தில் சிக்கி கருப்புசாமி பரிதாபமாக உயிரிழந்தார். இதனை கவனித்த ஓட்டுநர் அங்கிருந்து தப்பி ஓடினார். உடனடியாக அங்கிருந்தவர்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இதுகுறித்து அருகில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது. மாட்டுத்தாவணி போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.