கனமழையால் சாலை நடுவே திடீரென ஏற்பட்ட பெரிய பள்ளம் - அகமதாபாத்தில் பரபரப்பு!
குஜராத் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் அகமதாபாத்தின் முக்கிய சாலையில் மிகப்பெரிய பள்ளம் உருவானதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர்.
இந்தியா முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பருவமழை பெய்து வருகிறது. குறிப்பாக, டெல்லி, குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. குஜராத்தின் அனைத்துப் பகுதிகளிலும் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சௌராஷ்டிரா, கட்ச் ஆகிய பகுதிகளில் இன்று மழை பெய்யும் என்றும், ஜூலை 2 முதல் 4-ம் தேதி வரை குஜராத் முழுவதும் மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், குஜராத் மாநிலம், அகமதாபாத் ஸ்மார்ட் சிட்டியின் ஷேலாவில் கனமழையின் போது சாலையின் ஒரு பகுதி இடிந்து விழுந்து, பெரிய பள்ளம் ஏற்பட்டது.
இதனால் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர். இந்த பள்ளத்திற்குள் மழைநீர் நிரம்பி வருவதால் அதை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். பள்ளம் ஏற்பட்டபோது போக்குவரத்து அந்த சாலையில் குறைவாக இருந்ததால் எந்தவித உயிர் சேதமும் விபத்தும் ஏற்படவில்லை.