76வது குடியரசு தினவிழா - தேசியக்கொடி ஏற்றினார் ஆளுநர் ஆர்.என்.ரவி !
நாட்டின் 76வது குடியரசு தினவிழா இன்று கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழக அரசு சார்பில் மெரினா கடற்கரையில் உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தின விழா நடைபெற்றது. முதலில் சென்னை காமராஜர் சாலையில் அமைக்கப்பட்டுள்ள போர் நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை செலுத்தினார்.
இதைத்தொடர்ந்து குடியரசு தின விழாவில் பங்கேற்க வந்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பூங்கொத்து அளித்து வரவேற்றார். இதையடுத்து தேசிய கீதம் இசைக்க ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
அப்போது இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் தேசிய கொடிக்கு மலர் தூவப்பட்டது. இந்த விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். தொடர்ந்து முப்படை வீரர்கள் மற்றும் தமிழக காவல் துறையினரின் அணிவகுப்பு நிகழ்ச்சியும், மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகிறது.