மதுரை : 14 வயது சிறுமிக்கு தொடர் பாலியல் தொல்லை - பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட 6 பேர் கைது!
மதுரை மாநகர் பகுதியைச் சேர்ந்த 14 வயது, 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவி நேற்று முன்தினம் கடைக்கு சென்றுள்ளார். அப்போது கடைக்கு சென்று நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாத நிலையில், சிறுமியின் பெற்றோர் அவரை தேடிச் சென்றுள்ளனர். அப்போது எதிரில் அழுதபடி வந்த சிறுமி, அப்பகுதியைச் சேர்ந்த சிலர் தனக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக பெற்றோரிடம் கூறியுள்ளார்.
இதுகுறித்து மதுரை நகர் மகளிர் காவல்துறையினருக்கு பெற்றோர் தகவல் அளித்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் 14 வயது சிறுமிக்கு மெக்கானிக்கான முத்துக்குமார் (18), தனது கூட்டாளிகளான ஒரே பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும் மாணவர்கள் 3 பேர் மற்றும் 17 வயது சிறுவர்கள் ஆகியோர் இருக்கும் இடத்திற்கு சிறுமியை அழைத்துசென்று பாலியல் தொந்தரவு அளித்தது தெரியவந்துள்ளது.
மேலும் இவர்கள் நீண்ட நாட்களாக சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு
கொடுத்து வந்தது உறுதியான நிலையில், 6 பேரையும் மதுரை நகர் அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து, சிறார் சீர்திருத்த பள்ளியிலும், சிறையிலும் அடைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில் சிறுமி தனக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தது குறித்து பெற்றோரிடம் கூறுவதற்கு பயந்துள்ளதும், சிறுமியின் நடவடிக்கைகளை பெற்றோரும் கவனிக்காமல் இருந்துள்ளதும், தெரியவந்துள்ளது. இந்நிலையில் சிறுமி மனதளவில் அச்சத்துடன் இருப்பதால் அவருக்கு மனநல ஆலோசனை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.