அண்ணாமலையின் சொந்த ஊரில் காங்கிரசுக்கு 4 மடங்கு கூடுதல் வாக்குகள்!
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் சொந்த ஊரான கரூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் பாஜகவின் வாக்குகளை விட 4 மடங்கு அதிகமான வாக்குகளை காங்கிரஸ் பெற்றது.
நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று முன்தினம் (ஜூன் 4) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டன. இத்தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் INDIA கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவியது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளில் வெற்றி பெற்றது . INDIA கூட்டணி 234 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
இதில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை பெற்றது. வாக்கு எண்ணிக்கை முழு விவரங்கள் நேற்று வெளிவந்தன. இதன்படி, நடந்து முடிந்த தேர்தலில், பாஜக 240 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதனால், ஆட்சியமைக்க தேவையான 272 என்ற எண்ணிக்கையை விட 32 தொகுதிகள் குறைவாகவே பெற்றது.
கரூா் மக்களவைத் தொகுதியில் பாஜக சாா்பில் கரூா் மாவட்டத்தலைவா் வி.வி.செந்தில்நாதன் போட்டியிட்ட நிலையில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் சொந்த ஊரான கரூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் பாஜகவின் வாக்குகளை விட 4 மடங்கு அதிகமான வாக்குகளை காங்கிரஸ் பெற்றது.
அதாவது, அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளா் எல்.தங்கவேல் 44,342 வாக்குகளையும், காங்கிரஸ் வேட்பாளா் ஜோதிமணி 87,390 வாக்குகளையும் பெற்றனா். ஆனால், பாஜக வேட்பாளா் செந்தில்நாதன் 19,978 வாக்குகள் மட்டுமே பெற முடிந்தது. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கரூா் மாவட்டம் அரவக்குறிச்சி அடுத்த தொட்டம்பட்டியைச் சோ்ந்தவா் என்பது குறிப்பிடத்தக்கது.