வன விலங்குகளை வேட்டையாடிய மூவருக்கு ரூ.10 லட்சம் அபராதம்!
சேலம் மாவட்டம் சேர்வராயன் தெற்கு வனச்சரகத்தின், தேக்கம்பட்டி வனப்பகுதியில், மான், காட்டு பன்றியை சிலர் வேட்டையாடுவதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில், வனச்சரகர் துரைமுருகன் தலைமையில் அதிகாரிகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது ஓமலூர் பொட்டியபுரத்தை சேர்ந்த சுப்பிரமணி, மதியழகன், தேக்கம்பட்டி பிரகாஷ் ஆகியோர் வனத்துறையினரிடம் பிடிப்பட்டனர்.
வனத்துறையினர் அவர்களிடமிருந்து இருந்து துப்பாக்கி, வெடி , பணம் ஆக்கியவற்றை பறிமுதல் செய்தனர். இது குறித்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது 3 பேரும் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து வனத்துறையினர் அவர்களை கைது செய்தனர்.
மேலும், சுப்பிரமணிக்கு ரூ.4 லட்சம், மதியழகனுக்கு ரூ.4 லட்சம், பிரகாசுக்கு ரூ.2 லட்சம் என மொத்தமாக ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மூவரும் அபராத தொகையை கொடுத்ததை தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் அவர்களை எச்சரித்து விடுவித்தனர். வனவிலங்கு இறைச்சி வாங்குவோர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.