‘2வது சர்வதேச கிரிக்கெட் மைதானம்.. முதலமைச்சருக்கு நன்றி’ - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிவு!
“தமிழ்நாட்டின் 2 ஆவது சர்வதேச கிரிக்கெட் மைதானம் கோவையில் அமையும் என தேர்தல் வாக்குறுதி தந்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி’’ என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் வரும் ஏப். 19 ஆம் தேதி தொடங்கி ஜுன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. ஜூன் 4ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. கட்சிகள் சார்பாக தேர்தல் அறிக்கைகள் வெளியிடப்பட்டு வருகின்றன. அதில், ஏராளமான வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.
அந்த வகையில், கோவையில் உலக தரம் வாய்ந்த சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்நிலையில் இதற்கு இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளதாவது;
‘தமிழ்நாட்டின் 2 ஆவது சர்வதேச கிரிக்கெட் மைதானம் கோவையில் அமையும் என தேர்தல் வாக்குறுதி தந்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எண்ணற்ற விளையாட்டு வீரர், வீராங்கனையரைக் கொண்ட கோவையில், சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க, முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி, நம் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அனைத்து வகையிலும் முன்னுரிமை கொடுத்து உறுதியுடன் செயல்படும். சர்வதேச கிரிக்கெட் மைதானம் வேண்டும் என்னும் கோவை மக்களின் கனவை நனவாக்குவோம்’ என குறிப்பிட்டுள்ளார்.