For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"பூரி ஜெகந்நாதர் கோயில் கருவூல அறையின் சாவியை கண்டுபிடிக்கவே பிரதமர் மோடி தியானம் செய்கிறார்" - அண்ணாமலை இப்படிக் கூறினாரா? உண்மை என்ன?

09:18 AM May 30, 2024 IST | Syedibrahim
 பூரி ஜெகந்நாதர் கோயில் கருவூல அறையின் சாவியை கண்டுபிடிக்கவே பிரதமர் மோடி தியானம் செய்கிறார்    அண்ணாமலை இப்படிக் கூறினாரா  உண்மை என்ன
Advertisement

This News Fact Checked by ‘Newschecker‘

Advertisement

ஒடிசா தேர்தல் பிரசாராத்தில் பேசிய பிரதமர் மோடி பூரி ஜெகந்நாதர் கோயிலின் கரூவூல அறையின் சாவி தமிழ்நாட்டிற்கு சென்றுவிட்டதாக பேசியிருந்தார்.  இந்த நிலையில் 3 நாட்கள் தியானத்தில் ஈடுபடுவதற்காக  தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி பூரி ஜெகந்நாதர் கோயில் கருவூல அறையின் சாவியுடன்தான் திரும்ப செல்வார் என்று அண்ணாமலை பேசினார் என சமூக வலைதளங்களில் ஒரு செய்தி வைரலாக பரவியது. இதன் உண்மைத் தன்மை குறித்து நியூஸ் செக்கர் செய்தி நிறுவனம் ஆய்வுக்கு உட்படுத்தியது. இது குறித்து விரிவாக காணலாம்.

ஒடிசா தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடியின் பேச்சு :

இந்தியா முழுவதும் 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்ட தேர்தல் (102) கடந்த மாதம் 19-ம் தேதியும், 2ம் கட்ட தேர்தல் (88) கடந்த மாதம் 26-ம் தேதியும், கடந்த 7-ம் தேதி 3ம் கட்ட தேர்தலும் (93), கடந்த 13-ம் தேதி 4ம் கட்ட தேர்தலும் (96), கடந்த 20-ம் தேதி 5ம் கட்ட வாக்குப்பதிவும் (49), கடந்த மே 25ம் தேதி 6ம் கட்ட வாக்குப்பதிவு (58) நடைபெற்றது.

இதையடுத்து, 7-ம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1-ம் தேதியும் நடைபெற உள்ளது.  அதன்படி உத்தர பிரதேசம் மற்றும் பஞ்சாபில் தலா 13 தொகுதிகள், மேற்கு வங்கத்தில் 9 தொகுதிகள், பீகாரில் 8 தொகுதிகள், ஒடிசாவில் 6 தொகுதிகள், இமாச்சலப் பிரதேசத்தில் 4 தொகுதிகள், ஜார்க்கண்டில் 3 தொகுதிகள் மற்றும் யூனியன் பிரதேசமான சண்டிகரில் ஒரு தொகுதியிலும் என மக்களவைத் தேர்தலுக்கான கடைசி கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் மொத்தம் 904 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர். தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இந்த நிலையில் பிரதமர் மோடி இம்மாதம் 20 ஆம் தேதி ஒடிசாவில் பரப்புரை செய்யும்போது“பூரி ஜெகந்நாதர் கோயில் கருவூல அறையின் சாவி தமிழ்நாடு சென்றுவிட்டதாக மக்கள் கூறுகின்றனர். அதைத் தமிழ்நாட்டுக்கு அனுப்பியது யார்?” என்று கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு பதிலளித்த முதலமைச்சர் நவீன் பட்நாயக்கிற்கு நெருக்கமானவரும், பிஜூ ஜனதா தள முக்கிய நிர்வாகியுமான வி.கே.பாண்டியன் பூரி ஜெகந்நாதர் கோயிலின் ‘பொக்கிஷ ‘அறையின் தொலைந்து போன சாவிகளை பிரதமர் மோடி தனது அறிவாற்றலைப் பயன்படுத்தி கண்டுபிடிக்கட்டும் என தெரிவித்திருந்தார்.

சாவியை கண்டுபிடிக்கவே தியானம் - அண்ணாமலை பெயரில் பரவும் செய்தி

பிரதமர் நரேந்திர மோடி இன்று (மே 30 ஆம் தேதி) கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.  கன்னியாகுமரி வரும் பிரதமர் மோடி இன்று பிற்பகல் படகு மூலம் விவேகானந்தர் நினைவு பாறைக்கு சென்று தியான மண்டபத்தில் தியானம் செய்யவுள்ளார்.

பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தமிழகம் வரவிருக்கும் நிலையில்,“மூன்று நாள் தியானம் முடிந்து பிரதமர் திரும்பி செல்லும் போது  பூரி ஜெகந்நாதர் கோயில் கருவூல  சாவியுடன்தான் திரும்பி செல்வார்” என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக சமூக வலைதளங்களில் பதிவு ஒன்று பரவி வருகின்றது.

உண்மை சரிபார்ப்பு :

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக்  குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்தது. அதன்படி வைரலாகும் நியூஸ்கார்டானது தினமலரின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருப்பதால் அந்நிறுவனம் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை வெளியிட்டதா என அதன் சமூக ஊடகப் பக்கங்களில் நியூஸ் செக்கர் தேடியுள்ளது

இத்தேடலில் அந்நிறுவனத்தின் சமூக ஊடகப்பக்கங்களில் வைரலாகும் நியூஸ்கார்டில் குறிப்பிட்டுள்ள மே 28, 2024 அன்று இவ்வாறு ஒரு நியூஸ்கார்டு பகிரப்பட்டிருக்கவில்லை என்பது உறுதியானது.  இதனைத் தொடர்ந்து தேடுகையில் “தமிழக அமைச்சர்கள் 11 பேர் மீது ஊழல் வழக்கு உள்ளது. மேலும் 3 பேர் சிறை செல்லப்போவது உறுதி” என்று அண்ணாமலை பேசியதாக ஜனவரி 10, 2024 அன்று தினமலர் நியூஸ்கார்ட் ஒன்றை வெளியிட்டிருந்ததை காண முடிந்தது.

அந்த நியூஸ்கார்ட்டை எடிட் செய்தே மேற்கண்ட போலி நியூஸ்கார்டு உருவாக்கப்பட்டுள்ளது என அறிய முடிந்தது. வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான நியூஸ்கார்டையும், எடிட் செய்யப்பட்ட போலி நியூஸ்கார்டையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

https://x.com/dinamalarweb/status/1745091743651958942

இதனைத் தொடர்ந்து தினமலரின் டிஜிட்டல் துறையை சார்ந்த தண்டபாணியை நியூஸ் செக்கர் தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து விசாரிக்கையில் வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது என்பதை அவர் உறுதி செய்தார். இதனையடுத்து தமிழக பாஜகவின் சமூக ஊடக அணியின் தலைவர் எம்.எஸ்.பாலாஜியை நியூஸ் செக்கர் சார்பில் தொடர்புக் கொண்டு பேசுகையில், இத்தகவல் தவறானது, அண்ணாமலை இவ்வாறு பேசவே இல்லை” என்று அவர் பதிலளித்தார்.

முடிவு :

தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி பூரி ஜெகந்நாதர் கோயில் கருவூல அறையின் சாவியுடன்தான் திரும்ப செல்வார் என்று அண்ணாமலை கூறியதாக சமூக ஊடகங்களில் பரவும் தகவல் தவறானது  பல ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Note : This story was originally published by ‘Newschecker‘ and Republished by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

Tags :
Advertisement