“ஒருதலை பட்சமான ஆட்சி...முருக பக்தர்கள் மாநாட்டை தடுக்க முயற்சி” - நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!
விழுப்புரத்தில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.
தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி அமைந்தால் அது பாஜக ஆட்சியாக இருக்கும் என்ற அண்ணாமலையின் கருத்து தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், “ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வை இருக்கும். பாஜகவை பொறுத்தவரை அமித்ஷா கூறியது போல தேசிய ஜனநாயக கூட்டணியின் தமிழ்நாடு தலைவர்
எடப்பாடி.பழனிசாமி தான். அவர் என்ன முடிவு எடுக்கிறாரோ அதுதான் இறுதியானது.
முருக பக்தர்கள் மாநாட்டு தொடர்பான கேள்விக்கு அவர், “தமிழ்நாடு அரசு திருச்சியில் நடக்கும் மாநாட்டிற்கு, பெரிய ஊர்வகத்திற்கு அனுமதி வழங்குகிறார்கள். ஆனால் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு இருசக்கர
வாகனத்தில் செல்ல கூட அனுமதி இல்லை. சட்டம் ஒழுங்கு சரியில்லை. ஒரு முதலமைச்சர் எல்லோரையும் சமமாக நடத்த வேண்டும். இது ஒருதலை பட்சமான ஆட்சி.
விளம்பத்திற்காக மாநாடு நடத்தப்படவில்லை. சீமானும் இதில் கலந்து கொள்ளலாம். பாஜகவை சேர்ந்தவர்கள் மட்டும்தான் கலந்து கொள்ள வேண்டும் என யாரும் கூறவில்லை. முதலமைச்சரும் கலந்து கொள்ளலாம். எல்லா கட்சியினரும் மாநாட்டில் கலந்து கொள்ளலாம். இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் இந்த மாநாட்டை சிறப்பாக நடக்கக்கூடாது என ஒரு தலைப்பட்சமாக செயல்படுகிறார். பழனி மாநாட்டைவிட மிகப்பெரிய அளவில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெறும் என்பதால் இதனை தடுக்க நினைக்கிறார்கள்”
தொடர்ந்து அவர் பேசுகையில், “விஜய் ஒரு சிறந்த நடிகர். பெரும்பான்மை மக்களோடு நல்ல உறவு வைத்துள்ளார். அவருக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தமிழ்நாடு ஆன்மீக பூமியாக மாறிக்கொண்டு வருகிறது. பஹல்காம் தாக்குதல் நடத்தியவர்களுக்கு ஆதரவாக பேசும் ஒரு கூட்டம் இங்கு உள்ளது. தேர்தலுக்கு இன்னும் பத்து மாதங்கள் உள்ளது திமுக கூட்டணியில் இருந்து கூட கட்சிகள் வரும்”
இவ்வாறு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.