வஉசி மைதானத்தில் தகராறில் ஈடுபட்ட இளைஞர்கள் - தட்டிக்கேட்ட காவலருக்கு அரிவால் வெட்டு!
நெல்லை மேலப்பாளையம் அத்தியடி தெரு பகுதியைச் சேர்ந்தவர் முகமது ரஹ்மத்துல்லாஹ். இவர் மணிமுத்தாறு ஒன்பதாவது சிறப்பு பட்டாலியன் காவலராக பணி செய்து வருகிறார். இந்த நிலையில் விடுமுறையையொட்டி சொந்த ஊர் திரும்பிய முகமது ரஹ்மத்துல்லாஹ் நேற்று வஉசி மைதானத்திற்கு குடும்பத்தோடு சென்றுள்ளார்.
அப்போது முகமது ரஹ்மத்துல்லாவும், அவரது குடும்பத்தினரும் மைதானத்தில் இருந்தபோது அப்பகுதியில் இளைஞர்கள் சிலர் சண்டையிட்டுள்ளனர். அதனை தடுக்கச் சென்ற காவலர் முகமது ரஹ்மத்துல்லாவுக்கும் இளைஞர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கிருந்த இளைஞர்கள் திடீரென கையில் மறைத்து வைத்திருந்த அறிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றுள்ளனர்.
இதில் காயமடைந்த முகமது ரஹ்மத்துல்லாவை அவரது மனைவி மற்றும் அக்கம் பக்கத்தினர் உடனடியாக மீட்டு நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் மைதானம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் படுகாயம் அடைந்த காவலருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.