திருமணம் செய்வதற்காக ஆணைப் பெண்ணாக மாற்றிய இளைஞர்! உ.பி.யில் நடந்த பயங்கரம்!
திருமணம் செய்வதற்காக ஆண் நண்பரை அறுவை சிசிச்சை செய்து பெண்ணாக மாற்றிய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
உத்தரப் பிரதேசம் முசாபர் நகரைச் சேர்ந்தவர் 20 வயது முஜாஹித். இந்த இளைஞர் தன்னுடன் பழகும் ஓம் பிரகாஷ் என்பவர் தன்னை கட்டாயப்படுத்தி பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார். ஓம்பிரகாஷ் தன்னை கடந்த இரண்டு ஆண்டுகளாக மிரட்டி வந்ததாக முஜாஹித் தெரிவித்தார்.
உடலில் பிரச்னை இருப்பதாகக் கூறி, மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும் என்று பொய் சொல்லி ஓம்பிரகாஷ் தன்னை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும், பின்னர் மருத்துவனையில் மயக்க மருந்து செலுத்தி பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்ததாகவும் முஜாஹித் தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறும்போது, “அவர் என்னை அழைத்துச் சென்று, மறுநாள் காலை எனக்கு அறுவை சிகிச்சை செய்தார். எனக்கு நினைவு திரும்பியபோது, ஆணாக இருந்த நான் பெண்ணாக மாற்றப்பட்டேன்” என்றார். தன்னுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்றும், அதற்கு மறுப்பு தெரிவித்தால், தன்னுடைய தந்தையை கொலை செய்துவிடுவேன் என்று ஓம்பிரகாஷ் மிரட்டியதாகவும் முஜாஹித் கூறினார்.
"நான் உன்னை ஒரு பெண்ணாக மாற்றியுள்ளேன், இப்போது நீ என்னுடன் வாழ வேண்டும். உனக்காக ஒரு வழக்குரைஞரை ஏற்பாடு செய்துள்ளேன் மற்றும் திருமணத்துக்கும் ஏற்பாடு செய்துள்ளேன். உன் தந்தையை கொன்றவுடன் சொத்து உன் பெயருக்கு மாறிவிடும், பின்னர் அதை விற்று லக்னௌவுக்கு செல்வோம்" என்று ஓம்பிரகாஷ் கூறியதாக முஜாஹித் தெரிவித்தார்.
ஓம்பிரகாஷ் மற்றும் சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி, விவசாய சங்கத் தலைவர் ஷியாம் பால் தலைமையில் மருத்துவக் கல்லூரியில் போராட்டம் நடத்தப்பட்டது. இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தப்படும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் காவல் துறையினர் உறுதியளித்தனர்.
முஜாஹித்தின் தந்தை கடந்த ஜூன் 16 அன்று காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில், ஓம்பிரகாஷ் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட முஜாஹித்துக்கு குறைந்தபட்சம் ரூ. 2 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் விவசாய சங்கத் தலைவர் ஷியாம் பால் வலியுறுத்தினார்.