பூனைக் கடியால் இளைஞர் மரணம்: அலட்சியம் உயிரைப் பறித்த சோகம்!
மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த பாலமுருகன் (25) என்பவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு பூனை ஒன்று கடித்துள்ளது. பூனை கடித்ததை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், சிகிச்சை பெறாமல் அலட்சியமாக விட்ட நிலையில் பெரிய அளவிலான காயம் ஏற்பட்டுள்ளது.
பின்னர் தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்ற பின்னர், அங்கிருந்து அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பரிந்துரைத்துள்ளனர்.
இந்நிலையில் பூனைக்கடியால் பாதிக்கப்பட்ட பாலமுருகனை மதுரை அரசு மருத்துவமனை ரேபிஸ் சிகிச்சை வார்டில் நேற்று இரவு அனுமதித்துள்ளனர். அப்போது திடீரென்று தப்பி ஓட முயன்ற அவரை பிடித்து மீண்டும் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இதனையடுத்து சிகிச்சைக்காக ரேபிஸ் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தனி அறையில் இருந்த நிலையில், கடுமையான வலி மற்றும் மன உளைச்சல் காரணமாக திடீரென அதிகாலை அவருக்கு வழங்கப்பட்டிருந்த போர்வையால் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார். இதுகுறித்து அரசு மருத்துவமனை காவல்நிலைய காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பூனைக்கடியை அலட்சியமாக விட்டதால் மூன்று மாதத்திற்கு பிறகு மிகப்பெரிய உடல் நல குறைவு ஏற்பட்டு இளைஞர் தனியாக சிகிச்சைக்காக அடைக்கப்பட்ட நிலையில், தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இளைஞர் பாலமுருகனின் உடல் அரசு ராஜாஜி மருத்துவமனை பிணவறையில் உடற்கூராய்விற்காக வைக்கப்பட்டுள்ளது.