காதலியை கொன்று புதைத்த இளைஞர்... பின்னணி என்ன? வெளியான அதிர்ச்சி தகவல்!
கர்நாடகா மாநிலம் கதக் மாவட்டம் பெட்டகேரி போலீஸ் எல்லைக்குட்பட்ட நாராயணபுரா பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ் (வயது 28). இவர் பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வந்தார். இவரும் அதே கிராமத்தைச் சேர்ந்த மதுஸ்ரீ (25). என்பவரும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களின் காதலுக்கு மதுஸ்ரீயின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், அவரது பெற்றோர் மதுஸ்ரீயை ஹெதலகெரே கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சூழலில், கடந்த ஆண்டு (2024) டிசம்பர் மாதம் 16ம் தேதி மதுஸ்ரீ தனது உறவினர் வீட்டில் இருந்து மாயமானார். இதுகுறித்து மதுஸ்ரீயின் பெற்றோர் பெட்டகேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். காதலன் சதீஷ் மீது சந்தேகம் இருப்பதாக பெண்ணின் உறவினர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். போலீசார் சதீஷை அழைத்து விசாரணை நடத்தியபோது, மதுஸ்ரீ உறவினர் வீட்டுக்கு சென்ற பிறகு தான் அவரை பார்க்கவில்லை என்று கூறினார். இருப்பினும் போலீசார் சதீஷின் நடவடிக்கையை கண்காணித்தனர்.
இந்த நிலையில், 6 மாதம் கழித்து கடந்த 13ம் தேதி சதீஷ், மதுஸ்ரீயை இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்ற சிசிடிவி காட்சிகள் போலீசாருக்கு கிடைத்தது. இதனையடுத்து போலீசார் சதீஷிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர் மதுஸ்ரீயை கொலை செய்ததை ஒப்பு கொண்டார். கடந்த மாதம் டிச.16ம் தேதி சதீஷ் இருசக்கர வாகனத்தில் மதுஸ்ரீயை அழைத்து சென்று தனது தோட்டத்தில் தங்க வைத்தார். பின்னர் ஜனவரி 12ம் தேதி மதுஸ்ரீ, சதீஷிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த சதீஷ், துப்பட்டாவால் மதுஸ்ரீயின் கழுத்தை நெரித்து கொலை செய்தார்.
பின்னர் மதுஸ்ரீயின் உடலை தோட்டத்திலேயே குழி தோண்டி புதைத்தார். மேலும் அவரின் உடல் எலும்பு கூடாக மாறியதை அடுத்து அதனை தோண்டி எடுத்து வெவ்வேறு இடங்களில் புதைத்து வைத்ததாகவும் வாக்குமூலம் அளித்தார். அவர் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் மதுஸ்ரீயின் எலும்பு கூடுகளை கைப்பற்றி அதனை மரபணு சோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் கைதான சதீஷிடம் போலீசார் இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.