தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களுக்கு கனமழைக்கான "மஞ்சள் அலர்ட்"!
தமிழ்நாட்டில் தேனி, திண்டுக்கல், திருப்பூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு வரும் 22-ம் தேதி கனமழைக்கான மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கேரள கடலோர பகுதிகளிலும் தென்கிழக்கு அரபிக்கடலிலும் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாள்களாக தமிழ்நாட்டின் பல இடங்களில் அவ்வப்போது மிதமானது முதல் கன மழை பெய்து வருகிறது. அதனுடன் ஜுன் 20 வரை தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே தெரிவித்திருந்து.
குறிப்பாக, சென்னையில் அடுத்த இரு தினங்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. இதற்கிடையே சென்னையில் பகல் நேரத்தில் 38 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும் என்றும் இரவு நேரத்தில் மிதமான மழை பெய்யும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்த நிலையில் தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை மற்றும் நீலகிரி ஆகிய 5 மாவட்டங்களுக்கு வரும் 22-ம் தேதி கனமழைக்கான மஞ்சள் அலர்ட் எச்சரிக்கையை தென்மண்டல வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.