’இன்-ஹவுஸ் விசாரணைக்கு எதிரான யஷ்வந்த் வர்மாவின் மனு தள்ளுபடி’- உச்சநீதிமன்றம் அதிரடி!
டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர் யஷ்வந்த் வர்மா. கடந்த மார்ச் மாதம் இவருக்கு சொந்தமான பங்களாவில் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது தீயை அணைக்க சென்ற தீயணைப்பு படையினரால் அவரது வீட்டின் அவுட்ஹவுசில் இருந்து கட்டுகட்டான பணம் கண்டறியப்பட்டது. இதனையடுத்து தீயணைப்பு படையினர் அளித்த தகவலின் பேரில் காவல்துறையினர் அந்த பணத்தை கைப்பற்றினர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனையடுத்து உச்சநீதிமன்றமானது, நீதிபதி யஷ்வந்த் வர்மாவை அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டது. மேலும் நீதிபதி வீட்டில் பணம் கைப்பற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக நீதிபதிகள் கொண்ட ஒரு குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் இன்-ஹவுஸ் விசாரணையும் நடத்தியது. அந்த விசாரணை குழு தாக்கல் செய்த அறிக்கை அடிப்படையில் , உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்ய குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமருக்கு உச்சநீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா பரிந்துரைத்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, தன்னை பதவி நீக்கம் செய்ய பரிந்துரைத்ததையும், தனக்கு எதிரான இன்-ஹவுஸ் விசாரணை அறிக்கையையும் எதிர்த்து யஷ்வந்த் வர்மா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் தீபங்கர் தத்தா மற்றும் ஏ.ஜி.மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று விசாரித்தது. அவரது மனுவில், ”தனக்கு எதிரான விசாரணை நியாயமாக நடைபெறவில்லை என்றும் தனது அதிகாரப்பூர்வ இல்லத்தின் அவுட்-ஹவுசில் இருந்து பணம் கண்டெடுக்கப்பட்டதை மட்டுமே வைத்து குற்றத்தை நிரூபிக்க முடியாது என்றும் முறையிட்டிருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் யஷ்வந்த் வர்மாவின் நடத்தை நம்பிக்கையளிப்பதாக இல்லை என்று விமர்சித்ததுடன் வழக்கு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
இந்த நிலையில் உச்சநீதிமன்றம் இன்று யஷ்வந்த வர்மாவின் மனுவை அதிரடியாக தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளது.