திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்த பெண் உயிரிழப்பு!
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள மங்கலப்பட்டி சிரங்காட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்த பச்சையம்மாள் (வயது 40). இவர் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கடந்த 2017ம் ஆண்டு வரை பொதுமக்களிடம் வசூலித்த பணம் 4 கோடி ரூபாய் வரை பச்சையம்மாள் அந்த நிறுவனத்தில் கட்டி உள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே அந்த நிறுவனம் திவாலானதாக அறிவிக்கப்பட்டு அவர்கள் தலைமறைவாகியதாக தெரிகிறது. இவர் வசூல் செய்து கொடுத்த பணத்தை திரும்பக் கேட்டு பொதுமக்கள் இவரை மிரட்டியதாக தெரிகிறது. பணத்தை மீண்டும் நிர்வாகத்திடம் இருந்து வாங்கிக் கொடுக்க முடியாததால் இவர் மனஅழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள் : “அற்புதமான ஒன்று..” – விண்வெளி பயணம் குறித்து சுபான்ஷு சுக்லா பேச்சு
இதற்கிடையே, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சமூக நலத்துறை அமைச்சர் கூட்டம் நடைபெற்றது. கூட்டம் முடிவடைந்த பின்னர் அனைவரும் சென்று கொண்டிருந்தனர். அப்போது திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பச்சையம்மாள் தன்மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்துக்கொண்டு உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றார். இதில் அவர் படுகாயமடைந்தார்.
அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில், பச்சையம்மாள் சற்று நேரத்துக்கு முன்பு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழத்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.