"அற்புதமான ஒன்று.." - விண்வெளி பயணம் குறித்து சுபான்ஷு சுக்லா பேச்சு
அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க்-ன் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் மூலம் ஆக்ஸ்மின் -4 என்ற பெயரில் 4 பேர் கொண்ட குழு சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்ல திட்டமிடப்பட்டது. இந்த ஆக்சியம் திட்டம் 6 முறை ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையே, நேற்று பிற்பகல் 12.01 மணியளவில் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து பால்கன் 9 ராக்கெட் மூலம் ‘டிராகன்’ விண்கலம் விண்ணில் பாய்ந்தது.
இதையும் படியுங்கள் : வெளுத்து வாங்கிய கனமழை… வீடு இடிந்து இளைஞர் உயிரிழப்பு!
இந்த விண்கலத்தில் அமெரிக்கா, இந்தியா, போலந்து மற்றும் ஹங்கேரி நாடுகளைச் சேர்ந்த தலா ஒருவர் என 4 பேர் பயணம் செய்தனர். இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (இஸ்ரோ) வீரர் சுபான்ஷு சுக்லா (39) இந்த பயண திட்டம் மூலம் விண்வெளிக்கு சென்றுள்ளார். இந்த ராக்கெட் 8 நிமிடங்களில் முதல் கட்டமான புவிவட்ட சுற்றுப்பாதையை எட்டியது. முதல் கட்டத்தில் பயன்படுத்தப்பட்ட ராக்கெட் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியது.
சுமார் 28 மணிநேர பயணத்துக்குப் பின்னர் 400 கி.மீ. தொலைவில் புவியின் சுற்றுவட்டப் பாதையில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்துடன் டிராகன் விண்கலம் இன்று (ஜூன் 25) மாலை 4 மணியளவில் இணைந்தது. தொடர்ந்து அங்கு சுபான்ஷு சுக்லா குழுவினர் 14 நாட்கள் தங்கி ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளதாக தெரிகிறது. விண்வெளி நிலையத்தினுள் சென்ற 4 வீரர்களை ஏற்கெனவே உள்ள வீரர்கள் வரவேற்றனர்.
சுபான்ஷு சுக்லா இதுகுறித்து பேசுகையில், "விண்வெளிக்கு வந்தது அற்புதமான ஒன்று. விண்வெளியிலிருந்து பூமியைப் பார்க்கும் பாக்கியசாலிகளில் நானும் ஒருவராக இருப்பதில் மிகவும் பெருமையாகவுள்ளது. சர்வதேச விண்வெளியில் இருந்த குழுவினர் எங்களுக்கு சிறப்பான வரவேற்பளித்தனர். எனது எதிர்பார்ப்புகள் மற்றும் பார்வையை தற்போதைய குழுவினர் மிஞ்சிவிட்டனர்" என்று தெரிவித்தார்.