For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் - டிசம்பர் 2-ஆவது வாரத்தில் தொடங்க வாய்ப்பு!!

08:54 AM Nov 09, 2023 IST | Web Editor
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர்   டிசம்பர் 2 ஆவது வாரத்தில் தொடங்க வாய்ப்பு
Advertisement

நாடாளுமன்ற குளிா்கால கூட்டத் தொடர், வரும் டிசம்பா் 2-ஆவது வாரத்தில் தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement

தற்போது நடைபெற்று வரும் 5 மாநிலப் பேரவைத் தோ்தல் முடிவுகள் டிசம்பர் 3-ஆம் தேதி வெளியாகும் நிலையில், அதன்பின்னா் சில நாள்களுக்கு பிறகு குளிா்கால கூட்டத் தொடா் தொடங்கும் என்றும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு (டிச.25) முன்பாக கூட்டத் தொடா் நிறைவடையும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சிஆா்பிசி), சாட்சியங்கள் சட்டம் ஆகியவற்றுக்கு மாற்றான 3 மசோதாக்கள், குளிா்கால கூட்டத் தொடரில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது.

இந்த மசோதாக்களின் வரைவு அறிக்கைகளை, உள்துறை விவகாரங்கள் தொடா்பான நாடாளுமன்ற நிலைக் குழு அண்மையில் ஏற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது. அதேபோல், தலைமை தோ்தல் ஆணையா், தோ்தல் ஆணையா்கள் நியமனம் தொடா்பாக ஏற்கெனவே நிலுவையிலுள்ள முக்கிய மசோதாவும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

வழக்கமாக குளிா்கால கூட்டத் தொடா் நவம்பா் மூன்றாவது வாரத்தில் தொடங்கி, கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பாக நிறைவடையும். ஆனால், மிஸோரம், சத்தீஸ்கா், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் சட்ட பேரவைத் தோ்தல் நடைபெறுவதால், குளிா்கால கூட்டத் தொடரின் நாள்கள் குறைக்கப்படும் என்று தெரிகிறது.

ஆங்கிலேய ஆட்சிக் கால குற்றவியல் சட்டங்களை மாற்றுவதற்கான மூன்று மசோதாக்கள், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டன. இந்திய தண்டனைச் சட்டம் 1860-ஐ மாற்றம் செய்ய ‘பாரதிய நியாய சம்ஹிதா (பிஎன்எஸ்) மசோதா 2023’, குற்றவியல் நடைமுறைச் சட்டம் 1898-ஐ மாற்றம் செய்ய ‘பாரதிய நாகரிக் சுரக்ஷா சம்ஹிதா (பிஎன்எஸ்எஸ்) மசோதா-2023’, இந்திய சாட்சிய சட்டம் 1872-ஐ மாற்றம் செய்ய ‘பாரதிய சாக்ஷிய (பிஎஸ்) மசோதா 2023’ ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டன. இதேபோல், தலைமைத் தோ்தல் ஆணையா், தோ்தல் ஆணையா்கள் நியமனம் தொடா்பான மசோதாவும் மழைக்கால கூட்டத் தொடரில் அறிமுகம் செய்யப்பட்டது.

தற்போது உச்சநீதிமன்ற நீதிபதி அந்தஸ்தில் உள்ள தலைமைத் தோ்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களின் அந்தஸ்தை அமைச்சரவைச் செயலா் அளவில் கொண்டுவர வகைசெய்யும் இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. தோ்தல் ஆணையத்தின் தன்னாட்சியை பாதிக்கும் வகையில் இந்த மசோதா உள்ளதாக அவை குற்றம்சாட்டின. இதனிடையே, நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் கடந்த செப்டம்பரில் நடைபெற்றது. அதில் மேற்கண்ட மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம் காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement