IND vs ENG | தொடரை கைப்பற்றுமா இந்தியா? இங்கிலாந்து அணியுடன் 2வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்!
இந்தியா – இங்கிலாந்து அணிகள் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் போட்டி கடந்த 6ம் தேதி நாக்பூரில் நடைபெற்றது. இதில் 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் இந்திய அணி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இதனையடுத்து, இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி கட்டாக் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இந்த போட்டி இன்று மதியம் 1.30 மணியளவில் தொடங்குகிறது. இதில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணியும், தொடரை இழக்க கூடாது என்று இங்கிலாந்து அணியும் விளையாடும். இதனால் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்த போட்டியை முன்னிட்டு இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி வலது முட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக முந்தைய ஆட்டத்தில் ஆடவில்லை. அவர் இன்றைய ஆட்டத்தில் விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கோலி களம் இறங்குவதால் ஜெய்ஸ்வால் அல்லது ஸ்ரேயாஸ் அய்யர் தனது இடத்தை இழக்கக்கூடும் என கூறப்படுகிறது. இன்றைய ஆட்டத்தில் எந்த அணி வெற்றி பெறும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.