“சமஸ்கிருதத்திலிருந்தே இந்திய மொழிகள் பிறந்தன என கூறியதற்கு அமித்ஷா மன்னிப்பு கேட்பாரா?” - பேராசிரியர் அருணன் கேள்வி!
தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்ததாக நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல் பேசியிருந்த நிலையில், அதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என கர்நாடக திரைப்பட வர்த்தக சபை கூறியிருந்தது. இல்லையென்றால் தக் லைஃப் படம் கர்நாடகத்தில் திரையிட அனுமதிக்கப்பட மாட்டாது என தெரிவித்திருந்தது.
இந்த சர்ச்சை தொடர்பாக கமல்ஹாசன் தொடர்ந்த வழக்கு இன்று கர்நாடக உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தநிலையில், மன்னிப்பு கேட்பதில் என்ன ஈகோ என நீதிமன்றம் கமல்ஹாசனுக்கு கேள்வி எழுப்பியது. அதற்கு ஒரு வாரம் கால அவாகசம் வேண்டும் என ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் கேட்டிருந்தது. இதனைக் கேட்ட நீதிபதி நாகபிரசன்னா, நாங்கள் மன்னிப்புக் கோரவில்லை. கன்னட ஃபிலிம் சேம்பர்தான் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கோருகிறது என்று தெரிவித்தார்.
இதையடுத்து, கர்நாடகத்தில் தக் லைஃப் திரைப்படம் வெளியிடுவதை ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்துக் கொள்வதாக ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சமஸ்கிருதத்திலிருந்தே இந்திய மொழிகள் பிறந்தன என அமித்ஷா பேசினாரே, அதற்கு அவர் மன்னிப்பு கேட்பாரா? என எழுத்தாளரும், சிபிஎம் கட்சியின் மூத்த தலைவருமான அருணன் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் கமல் சொன்னது ஒரு மொழியியல் கருத்து. அதற்கு மாற்று கருத்து இருக்கலாம். ஆனால் மன்னிப்பு கேட்கச் சொல்லி மிரட்டுவது அநியாயம்” என தனது எக்ஸ் தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.