“கள் இறக்கிய சீமான் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?” - கிருஷ்ணசாமி கேள்வி!
உடுமலை பேட்டையில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது. “கடந்த ஒரு வாரமாக ஒரே பிரச்சினை உருவாக்கபட்டு வருகிறது. கள் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் ஒரு சில அமைப்புகள் ஒரு கட்சி இணைந்து சட்டவிரோதமாக கள் இறக்கி விற்பனை செய்வது தமிழ்நாடு மக்களுக்கு செய்யும் அநீதி. கள் உணவு பொருள் என்று சிலர் தவறான கருத்துகளை பரப்பி வருகின்றனர். தென்னை ம்ற்றும் பனை மரங்களில் கள் இறக்கி வருகின்றனர். கள் மது என்பது உண்மை. கள் அருந்துவது உடலுக்கு கேடு விளைக்கும். கள் இறக்குபவர்கள் மீது தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்து வருகிறது. சீமான் பேச்சை கேட்டு கள் இயக்கியவர்கள் மீது வழக்கு போட்டு சிறையில் அடைத்த அரசு, சீமான் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.
போலி விவசாயிகள் பேச்சை கேட்டு கள் இறக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டாம். விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல் பாதிக்கபட்டு வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மா விவசாயிகள் விலை கிடைக்காமல் பாதிக்கப்பட்டு வருகின்றனர். போலி விவசாயிகள் கள் இறக்க கோரி அப்பாவி விவசாயிகளை வழக்குகள் மூலம் பலியாக்கி வருகின்றனர். கள் இறக்கிய ஒரு கட்சியின் தலைவரை உடனடியாக தமிழ்நாடு அரசு கைது செய்ய வேண்டும்.
கள் உணவு பொருள் நல்லது என்று மக்களிடமும் விவசாயிகளிடமும் தவறான கருத்துகளை பரப்பி அவர்களை மீண்டும் பனையேறி மக்களை பனையேறிகளாகவே மாற்றவும் அவர்களை படிக்க விடாமல் அடிமையாக வைக்கவே போலி விவசாய சங்கங்கள் மற்றும் நாம் தமிழர் கட்சியின் கொள்கையாக வைத்துள்ளனர். ஏழை எளிய மக்களை கள்ளுக்கு அடிமையாக்க முயற்சித்து வருகின்றனர். அவர்கள் கள் இறக்கினால் நாங்கள் தடுக்க நேரிடும் இதனால் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும்.
தமிழ்நாட்டில் கள் அவசியமற்றது என்பதுதான் புதிய தமிழகம் கட்சியின் நிலைப்பாடு. தமிழ்நாடு அரசு கள் இறக்க அனுமதிக்க கூடாது. எந்த சித்த வைத்தியத்திலும் கள் உணவு பொருள் என்றோ உடலுக்கு நல்லது என்றோ கூறவில்லை. கள் மதுபாட்டில்களை விட மக்களை போதைக்கு அடிமையாக்கும் சக்தி கொண்டது. கள் இறக்கி அதில் போதை மாத்திரைகள் போட்டு வருகின்றனர்.
கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லுசாமி இதுவரை அதை உணவு பொருள் என்று நிரூபித்து காட்டியுள்ளாரா? கள் குடிக்க வேண்டாம் என்று திருக்குறளில் திருவள்ளுவரே கூறியுள்ளார். விஞ்ஞான ரீதியாக மருத்துவம் படித்த ஒரு மருத்துவர் கள் குடிப்பது உடலுக்கு நல்லது என்று சொல்வார்களா? ஒட்டு அரசியலுக்காக இவர்கள் கள் இறக்கி மக்களை முட்டாளாக்கி வருகின்றனனர்.