“விலங்குகள், பறவைகளை கணக்கெடுக்கும் நீங்கள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மறுப்பது ஏன்?” - அன்புமணி ராமதாஸ் கேள்வி
விலங்குகள், பறவைகளை கணக்கெடுக்கும் நீங்கள், மனிதனுக்கு நல்லது செய்ய சாதிவாரி கணக்கெடுப்பு மட்டும் எடுக்க மறுப்பது ஏன்? என தமிழ்நாடு அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி சிதம்பரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், மூவேந்தர் முன்னேற்றக் கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:
2000 வருடங்களாக சாதியை வைத்து தான் அடக்குமுறை செய்து வருகின்றனர். ஆங்கிலேயர் ஆட்சியில் 6 முறை சாதிவாரி கணக்கெடுப்பு நடைபெற்றுள்ளது. இந்தியாவில் ஊடகத்துறையில் 85 விழுக்காடு முன்னேறிய சமூகத்தினர் உள்ளனர். 6 விழுக்காடு இடஒதுக்கீடு பெற்று தந்தவர் ராமதாஸ். இந்தியாவில் சமூக நீதி என்று தொடர்ந்து போராடுபவர் ராமதாஸ். தமிழ்நாட்டில் 438 சாதிகள் உள்ளன. அவர்களுக்கு எந்த அடிப்படையில் இடஒதுக்கீடு கொடுக்கப்படுகிறது.
பிரசாந்த் கிஷோர் மூலம் திமுக கணக்கெடுப்பு நடைத்தி உள்ளது. அதன் மூலமே தேர்தல்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது. சாதி பார்த்து அமைச்சர் பதவி கொடுக்கும் நீங்கள் சாதிவாரி கணக்கெடுப்பு மட்டும் நடத்த மாட்டீர்களா? தமிழ்நாட்டில் சாதிவாரியாக கணக்கெடுப்பு எடுக்கப்படவில்லை என்றால் மிக பெரிய போராட்டம் நடத்தப்படும். விலங்குகள், பறவைகளை கணக்கெடுக்கும் நீங்கள், மனிதனுக்கு நல்லது செய்ய சாதிவாரி கணக்கெடுப்பு மட்டும் எடுக்க மறுப்பது ஏன்?
இவ்வாறு தமிழ்நாடு அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பினார்.