"முக்கிய திட்டங்களுக்கு இந்தியிலும் சமஸ்கிருதத்திலும் பெயரிடப்படுவது ஏன்?" - மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி
நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு மத்திய அரசிடம் சில கேள்விகளை எழுப்பியிருந்தார். இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் பாஜக அரசுக்கு அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,
"நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு மட்டுமல்ல, நாட்டு மக்களின் நெஞ்சங்களிலும் ஏராளமான கேள்விகள் நிரம்பியுள்ளன. அவற்றில் சிலவற்றை நான் கேட்கிறேன்: ஊழல்வாதிகள் பாஜகவின் கூட்டணிக்கு வந்தபின்பு, வாஷிங்மெஷினில் வெளுப்பது எப்படி? நாட்டின் முக்கியமான திட்டங்களுக்கும், சட்டங்களுக்கும் இந்தியிலும் சமஸ்கிருதத்திலும் மட்டுமே பெயரிடப்படுவது என்ன மாதிரியான ஆணவம்? மத்திய அமைச்சர்களே நம் குழந்தைகளை அறிவியலுக்குப் புறம்பான மூடநம்பிக்கைகளைச் சொல்லி மட்டுப்படுத்துவது ஏன்?
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில், ஆளுநர்களை வைத்துக் குழப்பம் விளைவித்து என்ன சாதிக்கப் போகிறீர்கள்? பாஜகவின் தேர்தல் வெற்றிக்காக, மக்களின் வாக்குகளைப் பறிக்கும் வாக்குத் திருட்டை SIR ஆதரிப்பது ஏன்? இரும்பின் தொன்மை குறித்து அறிவியல்பூர்வமாகத் தமிழ்நாடு மெய்ப்பித்த அறிக்கையைக்கூட அங்கீகரிக்க மனம்வராதது ஏன்? கீழடி அறிக்கையைத் தடுக்கக் குட்டிக்கரணங்கள் போடுவது ஏன்? இதற்கெல்லாம் பதில் வருமா? இல்லை வழக்கம்போல, வாட்சப் யூனிவர்சிட்டியில் பொய்ப் பிரசாரத்தைத் தொடங்குவீர்களா?"
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.