“ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பின்னால் யார் இருந்தாலும் தண்டிப்பது உறுதி” -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
“ஆம்ஸ்ட்ராங் கொலை பிண்ணனியில் இருப்பவர்களை கண்டறிந்து அவர்களை தண்டிப்பதில் அரசு உறுதியாக உள்ளது” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 5) இரவு பெரம்பூரில் அவரது வீட்டருகே படுகொலை செய்யப்பட்டார். இது தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதன் எதிரொலியாக சென்னை காவல் ஆணையராக இருந்த சந்தீப் ராய் ராத்தோரை பணியிடம் மாற்றி, சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி-யாக இருந்த அருண் என்பவரை சென்னை காவல் ஆணையராக மாநில உள்துறை நியமித்தது.
இந்நிலையில் படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் வீட்டிற்கு இன்று நேரில் சென்ற முதலமைச்சர், ஆம்ஸ்ட்ராங்கின் படத்துக்கு மலர் தூவி, அவரது மனைவிக்கும், குடும்பத்தாருக்கும் ஆறுதல் தெரிவித்தார்.
இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், ”பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் மறைவையொட்டி, பெரம்பூரில் உள்ள அவரது இல்லத்துக்குச் சென்று அவரது திருவுருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தி, துயரில் வாடும் அவரது மனைவி பொற்கொடிக்கும், குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்தேன்.
கொலை பாதகச் செயலில் ஈடுபட்டவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்திக் கடும் தண்டனையைப் பெற்றுத் தருவோம் என்று பொற்கொடிக்கு உறுதி அளித்தேன். கொலைக் குற்றத்தின் பின்னணியில் இருப்பது யாராக இருந்தாலும் அவர்களைக் கண்டறிந்து தண்டிப்பதில் எனது அரசு உறுதியாக உள்ளது. இது அனைவருக்குமான அரசு. அனைவரையும் அரவணைத்து எளியோர் நலன் காக்கும் அரசு, நீதியை நிச்சயம் நிலைநாட்டும்! காவல்துறை பாரபட்சமின்றி நெஞ்சுரத்தோடு கடமையை ஆற்றும்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்களது மறைவையொட்டி, அவரது இல்லத்துக்குச் சென்று அவரது திருவுருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தி, துயரில் வாடும் அவரது மனைவி திருமதி. பொற்கொடி அவர்களுக்கும் குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தேன்.
கொலை… pic.twitter.com/OaoHp0J8Xv
— M.K.Stalin (@mkstalin) July 9, 2024