தென்காசியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் யார்..? - சமூக வலைதளங்களில் பரவும் போஸ்டர்களால் குழப்பம்!
தென்காசியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் குறித்து இரண்டு பேரின் படங்களும் சமூக வலைதளங்களில் பரவும் நிலையில் பொதுமக்களிடையே குழப்பம் நிலவி வருகிறது.
மக்களவைத் தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் நேற்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் வரவிருக்கும் மக்களவைத் தேர்தல் தேதியை அறிவித்தார். இதன்படி, ஏப்ரல் 19-ம் தேதி முதல் 7 கட்டமாக தேர்தல் நடக்க உள்ள நிலையில் தமிழ்நாட்டிற்கு ஏப்ரல் 19-ம் தேதி தேர்தல் நடைபெறும்.
வாக்குப்பதிவு முடிந்த பிறகு ஜூன் 4-ம் தேதி மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை "தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி குறித்த தகவல் ஓரிரு நாட்களில் முடிவு செய்து அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியிடப்படும். பாஜக தேர்தலுக்கு தயாராக இருக்கிறது. இந்த தேர்தல் தமிழ்நாட்டில் இருக்கும் அனைவருக்கும் சவாலான ஒன்று.இந்த முறை தமிழ்நாட்டில் தேர்தல் களம் பாஜகவுக்கு சாதகமாக உள்ளது.” என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள இரு வேறு கட்சிகளை சேர்ந்த நபர்கள் தென்காசியில் போட்டியிடப் போவதாக சமூக வலைதளங்களில் பரவும் போஸ்டர்களால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பாஜக உட்பட சில கட்சிகள் இதுவரை தங்களது வேட்பாளர்களை அறிவிக்காமல் உள்ளனர்.
இந்த நிலையில், ஒரு சில கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் தாங்கள்தான் வேட்பாளர்கள் என அவர்களது ஆதரவாளர்களை வைத்து சுவரொட்டிகள் மற்றும் விளம்பரங்களை செய்து வருகின்றனர். அந்த வகையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான் பாண்டியன் தென்காசி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட உள்ளதாகவும், அவருக்கு தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள் எனவும் ஒரு விளம்பர பதாகைகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
அதே போல தென்காசி பாராளுமன்ற தொகுதியில் பாஜகவை சேர்ந்த ஆனந்தன் என்பவர் போட்டியிட போவதாகவும், அவருக்கு தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள் எனவும் விளம்பரங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருவதால் பொதுமக்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர்.