மதியம் 1 மணி வரை எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
கடலோர தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் நேற்று முன் தினம் (15-10-2025) நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, நேற்று (16-10-2025) குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவியது.
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் நேற்று முன் தினம் (15-10-2025) நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, நேற்றும் (16-10-2025) அதே பகுதிகளில் நிலவியது. இதன் காரணமாக, வரும் 19-ஆம் தேதி வாக்கில், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில், கேரள, கர்நாடக பகுதிகளுக்கு அப்பால் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் மதியம் 1 மணி வரை 16 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை அமையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 16 மாவட்டங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.