“ஜெயிக்கிறோமோ இல்லையோ முதல்ல சண்டை செய்யணும்”... தமிழ் சினிமாவில் கலக்கும் 'நடிப்பு அசுரன்'!
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரான கஸ்தூரி ராஜா - விஜயலட்சுமிக்கு மகனாக ஜூலை 28,1983-ல் பிறந்தார் வெங்கடேஷ் பிரபு. வெங்கடேஷ் பிரபு என்ற இயற்பெயரை கொண்ட இவர் சமையல் துறையில் சிறந்து விளங்க வேண்டும் என்ற ஆசையுடன் தனது மேல்படிப்பை முடித்தார். பின்னர் தனது குடும்பத்தின் கட்டாயத்தால் சினிமா துறையில் கால்தடம் பதித்தார். அப்போது தான் அவர் வெங்கடேஷ் பிரபு என்ற பெயரை தனுஷ் என்று மாற்றிக்கொண்டார்.
கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான முதல் திரைப்படமான 'துள்ளுவதோ இளமை' மூலம் அறிமுகமானார் தனுஷ். இவரது அசத்தலான நடிப்பில் இப்படம் மிகப்பெரிய ஹிட்டை கொடுத்தது. ஆனாலும், இப்படத்திற்கு பிறகு நடிகர் தனுஷ் உருவக்கேலி செய்யப்பட்டார். அவர்கள் என்னதான் கேலி செய்தாலும், அதனை பொருட்படுத்தாத தனுஷ், தனது அடுத்த படத்தையும் நடித்தார். அது 2003 ஆம் ஆண்டு வெளியான 'காதல் கொண்டேன்' திரைப்படம். இதனை தனது தனுஷின் சகோதரரான செல்வராகவன் இயக்கினார். அந்த திரைப்படத்தில் தனது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் தனுஷ். இப்படமும் மாபெரும் ஹிட்டை கொடுத்தது.
அதனை தொடர்ந்து அதே ஆண்டு தனது 3வது படமான 'திருடா திருடி' திரைப்டம் வெளியானது. இத்திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. குறிப்பாக இப்படத்தில் இடம்பெற்ற 'மன்மத ராசா' பாடலில் தனுஷ் தனது நடனத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். பின்னர் 2004 ஆம் ஆண்டு தொடர்ச்சியாக தனுஷ் நடித்த 'புதுக்கோட்டையிலிருந்து சரவணன்', 'சுள்ளான்' மற்றும் 'ட்ரீம்ஸ்' ஆகிய மூன்று திரைப்படங்கள் வெளியானது. இந்த மூன்று திரைப்படங்களும் அவருக்கு சரியாக கைக்கொடுக்கவில்லை.
இருப்பினும் 'புதுக்கோட்டையிலிருந்து சரவணன்' திரைப்படத்தில் இடம்பிடித்த 'நாட்டுசரக்கு நச்சுனுதான் இருக்கு' என்ற தனுஷின் குரலில் வெளியான முதல் பாடல் ரசிகர்களை கவர்ந்தது. இதற்கிடையே நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை, தனுஷ் திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். பின்னர் 2005 ஆம் ஆண்டு பாலு மகேந்திரா இயக்கத்தில் 'தேவதையை கண்டேன்' திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 2006 ஆம் ஆண்டு தனுஷின் 'புதுப்பேட்டை' மற்றும் 'திருவிளையாடல்' திரைப்படங்கள் வெளியானது.
'புதுப்பேட்டை' திரைப்படத்தில் தனுஷின் கொக்கிக் குமார் கதாபாத்திரம் தற்போது வரை மக்களின் மனதில் நிலைத்து நிற்கிறது. அதன் பின் 2007 ஆம் ஆண்டு இயக்குநர் வெற்றி மாறனின் 'இரும்புக்குதிரை' என்ற திரைப்படம் சில காரணங்களால் 'பொல்லாதவன்' என்ற பெயரில் மாற்றப்பட்டு தனுஷ் நடிப்பில் வெளியானது. இத்திரைப்படம் மிகப்பெரிய ஹிட்டை கொடுத்தது. குறிப்பாக இந்த திரைப்படத்தின் சண்டை காட்சியில் தனது சிக்ஸ் பேக் உடலை காட்டி அனைவரையும் ஈர்த்தார். மேலும் இப்படத்திற்கு பிறகு நடிகர் தனுஷை சிலர் தமிழ்நாட்டின் 'புரூஸ் லீ'என்றே அழைத்தனர்.
மேலும் படிக்காதவன், உத்தமபுத்திரன், ஆடுகளம், வேலையில்லா பட்டதாரி, மாரி போன்று இன்னும் பல ஹிட் படங்களை கொடுத்து தனக்கென ரசிகர் பட்டாளங்களை உருவாக்கினார் தனுஷ். ஆரம்பத்தில் தன்னை கேலி செய்தவர்களை, தனது நடிப்பு மூலம் ரசிகர்களாகவே மாற்றிக்கொண்டார். பின் தமிழ் சினிமா துறையில் அவருக்கு 'நடிப்பு அசுரன்' என்றே பெயரே வந்துவிட்டது. வடசென்னை, அசுரன், கர்ணன், போன்ற தனுஷின் மாஸ் திரைப்படங்கள் மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளது. தனுஷின் ரசிகர்கள் வடசென்னை பாகம் 2-வுக்கு ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
தனுஷ் கோலிவுட் மற்றுமின்றி பாலிவுட், ஹாலிவுட்டிலும் கலக்கத் தொடங்கினார். கடந்த 2022 ஆம் ஆண்டில் வெளியான 'தி கிரே மேன்' என்ற ஹாலிவுட் திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இந்திய சினிமாவையே அதிரவைத்தார் தனுஷ். இதற்கிடையே தன் வாழ்க்கையில் மேலும் அடுத்தடுத்து பல்வேறு படங்களை நடிக்கத் தொடங்கி தற்போது இயக்குநர், தயாரிப்பாளர், பாடகர், நடிகர் என்ற பல்வேறு திறமைகளை கொண்டுள்ள அவரை கொண்டாதவர்களே இல்லை என்று சொல்லலாம்.
தனது அசத்தலான நடிப்பின் மூலம் பல்வேறு விருதுகளையும் வென்றுள்ளார். நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றனர். அவ்வபோதிலும் நடிகர் தனுஷ் சினிமா துறையில் கடினமாக உழைத்து வருகிறார். அவரின் நடிப்பில் 'துள்ளுவதோ இளமை' தொடங்கி தற்போது 'குபேரா' வரை 51 படங்கள் வெளியாகியுள்ளது. இன்னும் சில படங்கள் வெளியாகவுள்ளன.