For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

வரதட்சணை வழக்கில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி!

06:18 PM Oct 13, 2024 IST | Web Editor
வரதட்சணை வழக்கில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி
Advertisement

வரதட்சணை வழக்கு ஒன்றில் தீர்ப்பளித்த அலகாபாத் உயர்நீதிமன்றம், மனைவியை தவிர இல்லற இன்பத்திற்கு ஒரு ஆண் எங்கு செல்ல முடியும்? என்ற பரபரப்பு கருத்தை முன்வைத்துள்ளது.

Advertisement

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த மீஷா மற்றும் பிரஞ்சல் சுக்லா என்ற தம்பதியினர் கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் தன்னிடம் வரதட்சணை கேட்டு துன்புறுத்துவதாக சுக்லாவின் மனைவி மீஷா, தனது மாமியார் மற்றும் சுக்லாவின் உடன்பிறப்புகளான சர்மா மற்றும் புண்யா ஷீல் ஷர்மா ஆகியோர் மீது வழக்கு தொடர்ந்தார்.

மேலும் தனது கணவர் பிரஞ்சல் அளவுக்கதிகமாக குடிப்பதாகவும், ஆபாசப் படங்கள் பார்ப்பதாகவும், இயற்கைக்கு மாறான பாலியல் செயல்களில் ஈடுபடுமாறு தன்னை வற்புறுத்துவதாகவும் மீஷா குற்றம் சாட்டினார். மேலும் தன்னை தனியாக விட்டுவிட்டு சிங்கப்பூர் சென்றுவிட்டதாகவும் அந்த வழக்கில் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த வழக்கு அலகாபாத் நீதிமன்றத்தில், நீதிபதி அனிஷ் குமார் குப்தா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது பிரஞ்சல் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வினய் சரண், வரதட்சணை கொடுமை என்பது பொய் குற்றச்சாட்டு எனவும், இவர்கள் இருவருக்கும் இடையில் இருப்பது உடல் உறவு தொடர்பான பிரச்னை என தெரிவித்துள்ளார். மேலும் பிரஞ்சலின் பாலியல் தேவைகளை நிறைவேற்ற அவர் மனைவி மறுப்பு தெரிவித்ததே இவர்களின் பிரச்னைக்கு காரணம் என தெரிவித்தார்.

மேலும் விசாரித்ததில் திருமணத்திற்கு முன்பு கூட பிரஞ்சலின் குடும்பத்தின் எந்தவிதமான பணமோ, பொருளோ வாங்கவில்லை எனவும், கேட்கவில்லை எனவும் தெரியவந்துள்ளது. இதனைக்கேட்ட நீதிபதி பிரஞ்சல் குடும்பத்தின் மீதான வரதட்சணை வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கு தொடர்பாக அவர் பேசியதாவது,

“இந்த விவகாரத்தில் இருதரப்புக்கு இடையேயான தகராறு, பாலியல் இணக்கமின்மை தொடர்பான சர்ச்சை என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. மேலும் இந்த தகராறு காரணமாக எதிர் தரப்பினரால் (மனைவி) தவறான மற்றும் இட்டுக்கட்டப்பட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்து உடனடி புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரஞ்சலுக்கு எதிரான ஆதாரங்கள் எதுவும் இல்லை.

தார்மீக நாகரீக சமுதாயத்தில் கணவன், மனைவி இயற்கையாகவே ஒருவருக்கொருவர் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும். ஒருவர் தனது சொந்த மனைவியை அல்லது கணவரை தவிர இல்லற இன்பத்துக்கு வேறு எங்கு செல்ல முடியும்?” என நீதிபதி தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement