நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி? தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா பேட்டி!
நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி என்பது குறித்து ஜனவரி மாதம் அறிவிக்கப்படும் என அக் கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா கூறியுள்ளார்.
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி மற்றும் அண்ணா சமாதிக்கு மாலை அணிவிக்க அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் சமாதியில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
இதனை அடுத்து பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்த போது கூறியதாவது:
இன்றைக்கு தமிழ்நாட்டின் பெரும் தலைவர்களாகிய எம்ஜிஆர், ஜெயலலிதா, பெரியார், காமராஜர், அம்பேத்கர் நினைவகத்திற்கு சென்று அவர்களுக்கு உரிய மரியாதை செலுத்தினோம்.
கருணாநிதி மற்றும் அண்ணா நினைவிடங்களில் கட்டுமானப் பணி நடைபெறுவதால் அனுமதி மறுக்கப்பட்டது. ஆகையால் ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் நினைவிடங்களில் மட்டும் மரியாதை செலுத்தினோம். இதை நான் அரசியலாக்க விரும்பவில்லை. உதயநிதி பிறந்தநாள் மட்டும் கலைஞர் மற்றும் அண்ணா நினைவிடத்தில் அனுமதிக்கப்பட்டது. அவர்களுடைய கட்சி நினைவிடம் அவங்க ஆட்சி அனுமதி கொடுத்திருக்கலாம் அதை நான் அரசியலாக்க விரும்பவில்லை.
கூட்டணி யாருடன் என்பது குறித்து அறிவிக்க முழு அதிகாரம் விஜயகாந்துக்கு உள்ளது. ஜனவரி மாதம் யாருடன் கூட்டணி என அறிவிப்போம். தேர்தல் வியூகம், கட்சியின் அடுத்த கட்ட வளர்ச்சி, உள்ளிட்டவை ஓரிரு நாட்களில் தெரிய வரும்.
இவ்வாறு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கூறினார்.