“சுட்டுப்பிடிக்க தமிழ்நாடு மீனவர்கள் என்ன காக்கை, குருவியா?” - அந்தோனிப்பிள்ளை மரியதாஸ் பேச்சுக்கு திலகபாமா கண்டனம்!
பாமக பொருளாளர், கவிஞர் திலகபாமா வெளியிட்டுள்ள அறிக்கையில் ,
“திரைகடல் ஓடியும் திரவியம் தேடு” என்றார் ஒளவையார். ஆனால் எம் மீனவர்களோ கடல் எல்லையைத் தாண்டி அல்ல, தங்களுக்கு உண்டான எல்லைக்குள் தான் தனக்கும், தன்னை நம்பியிருக்கும் குடும்பத்தினருக்கும் ஒருவேளை உணவிற்கான ஆதாரத்தை தேடுகின்றனர். நிலத்திலேயே எல்லைகளை வரையறுக்க இயலாத போது, பரந்து விரிந்து கிடக்கும் கடலில் எல்லையைக் கண்டறிவது அரிதானது. அது மட்டுமல்ல, செவுள் வலை படகிலிருந்து வழியத் தொடங்கினால் படகு போகின்ற திசையை வலையும் கடல் நீரோட்டமும் காற்றும் மட்டுமே தீர்மானிக்கிறது.
அப்படி தெரியாமல் எல்லை தாண்டி விடும் தமிழக மீனவர்களை சுட்டுக்கொல்வது, கைது செய்து சிறையில் அடைத்து அடித்து உதைப்பது என ஏற்கனவே இலங்கை கடற்படை வெறியாட்டம் ஆடி வருகிறது. கடந்த 40 ஆண்டுகளில் இலங்கை கடற்படையால் 843 மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மீனவர்களின் வாழ்வாதாரமான பல லட்சம் மதிப்பிலான படகுகள் சிறைபிடிக்கப்பட்டு பல படகுகள் பயன்படுத்த முடியாத அளவிற்கு சிதிலமடைந்துள்ளன.
இதுவரை இலங்கை கடற்கரையால் மட்டுமே தமிழக மீனவர்கள் சொல்லொண்ணா துயரங்களை அனுபவித்து வந்தார்கள். சில சமயங்களில் இலங்கை மீனவர்களும் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவது, மீன்களை பறித்துச் செல்வது, வலைகளை அறுத்துவிடுவது போன்ற அட்டூழியங்களில் ஈடுபட்டு வந்தார்கள். ஆனால் இது இருதரப்பு மீனவர்கள் இடையிலான வாழ்வாதார போராட்டம் என்பதால் மத்திய, மாநில அரசுகள் கண்டும் காணாதது போல் கழன்றுவிட்டன.
தற்போது மீன்பிடித்தடைக்காலம் முடிந்து கடலுக்குள் கால் வைக்க காத்திருக்கும்
எம் தமிழக மீனவர்களை சுட்டுத் தள்ள வேண்டும் என இலங்கை கடற்படைக்கு
யாழ்ப்பாணம் மீனவ சங்கங்களின் சம்மேளனத்தின் தலைவர் அந்தோனிப்பிள்ளை மரியதாஸ் பகிரங்க வேண்டுகோள் வைத்திருப்பது பேரதிர்ச்சி தருகிறது. தமிழக மீனவர்களைப் போலவே அன்றாடம் பிழைப்பிற்காக கடலில் உயிரை பணயம் வைத்து போராடும் யாழ்பாணம் மீனவர்களுக்குள் தனது சக தொழிலாளி மீது இவ்வளவு வன்மமா? என அதிர்ச்சி அடைந்தேன்.
வெறுப்பின் உச்சக்கட்ட வெளிப்பாடாக, தமிழக மீனவர்களை கைது செய்து அவர்களது படகுகளை கைப்பற்ற வேண்டும் என்றும், ஒருவேளை அவர்களை கட்டுப்படுத்த முடியாவிட்டால் சுட்டுப்பிடியுங்கள் என்றும், ஏதோ காக்கை, குருவிகளை சொல்வது போல் எம் தமிழக மீனவர்களை யாழ்ப்பாணம் மீனவ சங்கங்களின் சம்மேளனத்தின் தலைவர் குறிப்பிட்டிருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது.
எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றுவது போல், முடிவில்லாமல் நீண்டு வரும் இலங்கை மற்றும் தமிழக இடையிலான எல்லைக்கோட்டு பிரச்சனையை, இருநாட்டு மீனவர்களுக்கு இடையிலான தனிப்பட்ட பிரச்சனையாக மாற்ற நினைக்கும் அந்தோனிப்பிள்ளை மரியதாஸ் மீது இலங்கை அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
மேலும் இருநாட்டு மீனவர்களின் பிரச்சனையில் அரசியல் செய்யாமல், இலங்கை மற்றும் தமிழக மீனவர்களை நேரடியாக வைத்து சமரச பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் அரசுகளுக்கு கோரிக்கை விடுக்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.