குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை? - தமிழ்நாட்டை அதிரவைத்த பொள்ளாச்சி வழக்கில் பரபரப்பு தீர்ப்பு!
கடந்த 2019 ஆம் ஆண்டு பொள்ளாச்சியில் 8க்கும் மேற்பட்ட இளம்பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கை பொள்ளாச்சி போலீசார் முதலில் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் பொள்ளாச்சியை சேர்ந்த திருநாவுக்கரசு (25), சபரிராஜன் (25), வசந்தகுமார் (27), சதீஷ் (28), மணிவண்ணன் (25), ஹேரேன் பால் (29), பாபு என்கிற பைக் பாபு (34), அருளானந்தம் (34), அருண்குமார் ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கு மீதான விசாரணை கோவை சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. பாதிக்கப்பட்ட 8 பெண்களும் குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு எதிராக சாட்சி அளித்தனர். வழக்கின் ஒவ்வொரு விசாரணையின்போதும் குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் சேலம் சிறையில் இருந்து வீடியோ கான்ஃபரன்சிங் மூலமாக நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த வழக்கில் சாட்சி விசாரணை, அரசு மற்றும் எதிர்தரப்பு இறுதிவாதம் முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதன்படி, இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என நீதிபதி நந்தினி தேவி தீர்ப்பளித்தார். இதற்கிடையே, நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேக பேட்டியளித்த சிபிஐ தரப்பு வழக்கறிஞர் சுரேந்திர மோகன், குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையாக ஆயுள் தண்டனை வழங்கப்படும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்தார். இந்த நிலையில், தமிழ்நாட்டை உலுக்கிய பொள்ளாச்சி வழக்கின் தண்டனை விவரம் வெளியாகியுள்ளது. குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
செய்தியாளர்களிடம் பேசிய சிபிஐ தரப்பு வழக்கறிஞர் சுரேந்திர மோகன் கூறியதாவது,
"பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தமாக ரூ.85 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்கள் ஒவ்வொருவருக்கும் ரூ. 10 முதல் ரூ.15 லட்சம் வரை நிவாரணம் கிடைக்கும். சட்டப்பிரிவு 376டி, 376என் ஆகிய பிரிவுகளின்படி பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது" என்றார்.