“பிரதமர் மோடியின் உயர்கல்வி விவரங்களை கேட்பதில் என்ன பொதுநலன் உள்ளது?” - மனுதாரரிடம் டெல்லி உயர் நீதிமன்றம் கேள்வி!
டெல்லி பல்கலைக்கழகத்தின் பி.ஏ அரசியல் பட்டத்தை கடந்த 1978ம் ஆண்டு பெற்றதாக பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரமாண பத்திரங்களில் கூறியிருந்தார். இந்நிலையில் கடந்த 2016ம் ஆண்டு நீரஜ் சர்மா என்பவர் தகவல் அறியும் உரிமை மூலம் டெல்லி பல்கலைக்கழகத்திடம் 1978ம் ஆண்டு பி.ஏ அரசியல் படித்த மாணவர்களின் விவரங்களை கேட்டுள்ளார்.
ஆனால் தனி நபர் விவரங்களை வழங்க முடியாது எனக் கூறி டெல்லி பல்கலைக்கழகம் மறுத்தது. டெல்லி பல்கலைக்கழகத்தின் முடிவை எதிர்த்து, மத்திய தகவல் ஆணையத்தை நீரஜ் சர்மா அணுகிய நிலையில், டெல்லி பல்கலைக்கழகம் உரிய ஆவணங்களையும் வழங்குமாறு மத்திய தகவல் ஆணையத்தால் உத்தரவிடப்பட்டது.
ஆனால் மத்திய தகவல் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் 2017 ஜனவரி 23ம் தேதி டெல்லி பல்கலைக்கழகம் வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கு இன்று டெல்லி உயர் நீதிமன்றத்தின் நீதிபதி சச்சின் தத்தா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது,
“தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இத்தகைய ஆவணங்களை கோருவதில் ஏதேனும் பொது நலன் உள்ளதா? என நீதிபதி கேள்வி எழுப்பினார். தொடர்ந்து டெல்லி பல்கலைக்கழகம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், மாணவர்களின் தனிப்பட்ட விவரங்கள் டெல்லி பல்கலைக்கழகத்தால் பாதுகாக்கப்பட்டு வரும் நிலையில், அதனை பொதுவெளியில் வழங்க முடியாது என திட்டவட்டமாக கூறினார்.
வழக்கில் விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்பதால் பிப்ரவரி 19ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி உத்தரவிட்டார்.