பிரதமர் மோடி நாளை கோவை வருகை - பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!
தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில் இயற்கை விவசாயத்தை வலியுறுத்தியும், அதற்கான தொழில்நுட்பங்கள் மற்றும் கொள்கைகளை வகுக்க வலியுறுத்தியும் விவசாயிகள் மாநாடு கோவை கொடிசியா வளாகத்தில் நாளை (நவ.19) நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைக்கிறார். இதற்காக அவர் நாளை மதியம் 1.30 மணியளவில் விமானம் மூலம் கோவை வருகை தருகிறார். விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.
இதனைத் தொடர்ந்து, அவர் அங்கிருந்து கார் மூலம் மாநாடு நடைபெறும் கொடிசியா வளாகத்துக்கு செல்கிறார். அங்கு பிரதமர் மோடி மாநாட்டை தொடங்கி வைத்து உரையாற்றுகிறார். மேலும், சிறப்பாக செயல்பட்ட விவசாயிகளுக்கு விருது வழங்கி கொளரவிக்கிறார். இதனையடுத்து, அவர் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த இயற்கை வேளாண் விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடுகிறார்.
இந்நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி மாலை 3.15 மணியளவில் கொடிசியாவில் இருந்து கார் மூலம் கோவை விமான நிலையம் செல்கிறார். அங்கிருந்து தனி விமானம் மூலம் டெல்லி செல்கிறார். பிரதமர் மோடியின் கோவை வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில், கோவை விமான நிலையத்தில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. சிங்காநல்லூர், எஸ்.ஐ.எச்.எஸ். காலனி உள்ளிட்ட பகுதிகள் ‘ரெட் ஜோன்’ பகுதிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பகுதிகளில் இன்று முதல் நாளை இரவு 7 மணி வரை டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.